பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

125



சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று எங்கே அழைப்புக் கிடைத்தாலும் நுழைப்புக்குப் பின் வாங்கமாட்டார்கள் அற்பர்கள்; மானம் மிக்கவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருந்தாலும் உள்ளது சோறும் நீரும் போதும் என்ற எளிய உணவு உண்டு அமைதி காண்பர். அலைச்சல் என்பது அவர்கள் உளைச்சலில் காணமுடியாது. அலைகிறவர்கள் வாழ்க்கையின் நன்மையைத் தொலைத்தவர் ஆவார்.

நெற்கதிர்கள் நீர் இல்லாமல் வாடுகின்றன. அவற்றை வாழ வைக்கும் பொறுப்பை மேற்கொள்ளா மல் மழை நீர் கடலுள் பெய்கிறது. இதைப் போல் அறிவற்றவர் கைப்பட்ட செல்வம் செறிவு அற்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். வீண் விரயம் ஆக்குகின்றனர். ஏன் என்று கேட்க ஆள் இல்லை; இன்னும் இந்தச் சமூகம் விழிக்கவில்லை.

நுண்ணுணர்வு அற்ற பேதைகள் நூல் பல படித்தாலும் அவர்கள் அறிவு பெருக்கிக் கொள்வது இல்லை. அதுபோல பேதையரிடத்துப் படும் செல்வம் மேதகு செயல்களுக்குப் பயன்படுவது இல்லை. செல்வம் இருந்தும் செல்வம் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை; சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி இதுவாகும்.