பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

143


அவன் நல்ல குணங்கள் மறைகின்றன. அடுத்த வீட்டுக்காரனாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நல்லது; உறவு கெடாது. ஏதோ பகை வெறுப்பு இல்லாமல் வாழ முடியும். கேட்பது தவறு அன்று. தராதவன் அவன் கருமி, அதனால் விலகி நிற்பது நல்லது.

வைர அட்டிகை கதை தெரியுமா? திருமணத்துக்குச் செல்லப் பக்கத்து வீட்டுக்காரியிடம் ‘வைரச் சரடு’ இரவல் கேட்டாள். அங்கே அதைத் தொலைத்துவிட்டாள். என் செய்வாள்? கடன் உடன் வாங்கிப் புதிய வைரச்சரடு வாங்கி எதுவும் விளக்காமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாள். இந்தக் கடனுக்காகக் காலமெல்லாம் உழைத்தாள். ஓடாய்த் தேய்ந்தாள். பக்கத்து வீட்டுக்காரி கேட்டாள். "நீ பேரழகியாக இருந்தாய். இன்று சீர் கெட்டு விட்டாயே ஏன்?” என்று விசாரிக்கிறாள். “எல்லாம் வைரச் சரடுதான்” என்று விளக்கம் கூறுகிறாள்.

“அடிப்பாவி அது வைரம் அன்று; வெறும் போலிக் கல்” என்றாள். அதிர்ச்சி ஏற்பட்டது. “இரவல் வாங்குவது எவ்வளவு தீது” என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரி அந்த வைர அட்டிகையைத் திருப்பித் தந்தாள்; அஃது அவளுக்கு அழகு சேர்க்கவே இல்லை. ஒரு சிலர் கொடுத்தும் கெடுத்தும் விடுகின்றனர். இயன்றவரை பிறரைக் கேட்காமல் இருப்பது நல்லது; உறவுகள் நீடிக்கும். இல்லை என்று மறுத்தாலும் அவர்கள் வேதனைப்படுவர். என் செய்வது?