பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

147



சட்டசபைகள் ஜனநாயக அமைப்பால் உருவானவை. மக்களால் மதிக்கத்தக்கவர்கள் இவர்கள் என்று தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். அவைக்கு ஒரு தலைவர் உண்டு; அமைதி நிலைநாட்டவே அவர் அமர்ந்திருக்கிறார்; என்றாலும் ‘அமளிகுமளி’ என்று ஒரு சில செய்திகள் வருகின்றன. “மைக்குகள் கைக்கு வந்தபடி தாக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன; சட்டைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க் கட்சிக்காரர்களும் புதிர்க் கட்சிக்காரர்களும் வெளியேறுகின்றனர். காக்கிச் சட்டை அணிந்த காவல் நிலையத்தார் “ஹாக்கி விளையாடினர்” என்று இப்படித் தாக்கிச் செய்திகள் வராமல் இருப்பது இல்லை. அவை நடைமுறை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு விடை தருவன ஆகும். எப்பொழுதோ சில சமயம் இவ்வாறு நடைபெறுகின்றன என்றாலும் அவை சரித்திரத்தில் இடம்பெற்று விடுகின்றன.

கற்றோர் அவை இதுபோன்ற நிலைக்கு மாறக்கூடாது. கற்றவர் அறிவின் பிரதிநிதிகள்; ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும். இதையே ‘அவை அறிதல்’ என்று உணர்த்தப்படுகிறது.

கல்லாத மூடர் சிலர் அழகுபடப் பேச முடிகிறது என்பதற்காக அவர்களும் கவி அரங்கு ஏறி விடுகிறார்கள். அந்தக் கவிதைகள் தனி மனிதர் புகழ்ச்சிகளாக அமைகின்றன. அதனால் அவை சிறப்புப் பெறுவது இல்லை. மானுடம் பாடுபவனே மகாகவி; தனிமனிதர் துதிபாடுபலர் பழங்கால அரசு அவைக் கவிஞர்; மக்கள் கவிஞர் அல்லர். புகழ்ச்சிக்கே கவிதை என்ற நிலை மாறிப் புதுமைக்குக் கவிதை என்ற நிலைபெற வேண்டும்.