பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

159


அவள் கால்பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம்’ என்பது பழமொழி. தாம் இட்ட பணிகளைச் சற்றுப் பிசகாசச் செய்து விட்டால் அவர்களை நோக்கிக் கெடு பிடி; திட்டு வசவு. ‘நா காக்க’ என்று கூறியது இவர்களையும் நோக்கியே. பணி செய்பவர் அவர்கள் அடிமைகள் அல்லர், மிடிமைக்காக அவர்கள் பணி செய்கின்றனர். ஆட்களைக் கனிவாக நடத்துவது கண்ணியம் ஆகும்; அது நன்மை தரும்.

சில முரடர்கள்; கல்லாத கசடர்கள்; அவர்கள் தீமை செய்தே பழகிவிட்டவர்கள்; அவர்களைத் திருத்தலாம் என்று திருக்குறள் கொண்டு சொல்கிறாய்; அதை நீ தான் படித்துக் கொண்டிருக்க முடியும். அவனுக்குப் பொருள் விளங்காது. தனி மனிதன் மட்டும் அன்று. இனித் திருக்குறளைப் படித்தால் பயன் இல்லை என்று சமூகம் பேசி வருகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் இன்று ஊழலில் உழல்கிறார்கள் என்று உலகம் பேசுகிறது. துணிந்து எதிர்க்க முடியுமா? நீ தோல்வி தான் காண்பாய். சில அநீதிகள் கால் ஊன்றிவிட அவற்றையே மூலதனமாக வைத்து இன்று நிறுவனங்கள் நடைபெறுகின்றன. எதையுமே மாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்து ஆகிவிட்டது. கல் பாறையை அகற்ற நீ கை கொடுத்தால் உன் கைதான் நசுங்கும்; பாறை அசங்காது. அதை அகற்றக் கடப்பாறை தேவைப்படும் அதைவிட இயந்திரத் துக்கி தேவைப்படும். ஒரு பிரளயம் வந்தால் தவிர இந்தக் குப்பைகளை ஒழிக்க முடியாது அதனைப் புரட்சி என்று பேசுகிறார்கள். அதிலும் இன்று நம்பிக்கை அற்றுவிட்டது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் இவர்கள் உருவாகிவிட்டனர். இன்று இவர்கள் புதுப் பிரச்சனைகள் ஆகிவிட்டனர்.