பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



குறைகளும் நிறைகளும் உரையில் எடுத்துக் காட்டுவர். நடுநிலைமையில் இருந்து அவற்றை ஆய்ந்து உன்னை நீ வளர்த்துக் கொள். கலைத்துறைக்கே இது மிகவும் அடிப்படை.

கவிதை ஒன்று எழுதிவிட்டால் தன்னைக் கண்ணதாசன் என்று கூறித் தலை கனக்கின்றான். கதை ஒன்று எழுதிவிட்டால் காண்டேகர் வாரிசு தான் என்று அளக்கிறான். நாடகம் ஒன்று எழுதிவிட்டால் தன்னைப் பம்மல் என்று விம்மிதத்தோடு பறை சாற்றுகிறான். அழகிய உரைநடை எழுதிவிட்டால் தன்னைப் புதுமைப் பித்தன் என்று பிதற்றுகிறான். இப்படி ஒவ்வொரு துறையிலும் தனக்கு விஞ்சியவர் இல்லை என்ற தறுக்குபவர் பலர். இவை வீண்செருக்கு; பாராட்டு என்பது பிறரிடமிருந்து பெறுவது. உன்னையே நீ உயர்த்திப் பேசுவது தற்புகழ்ச்சி என்று கூறுவர். இப்படியே உன்னை நீ புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தால் உன்னைப் பாக்கத்து மருத்துவமனைக்குத் தள்ளிச் சென்றுவிடுவர். பத்துப்பேர் வந்து மருத்துவம் பார்த் தாலும் உன் பித்த நிலையை மாற்ற முடியாது. எதுவும் மிகையாகக் கொண்டால் அது பிறர் நகையாக மாறிவிடும். உனக்கும் தகுதி இருக்கிறது; மேலும் உழைத்து உயர்வு அடைக. நீயே உன்னைப் பற்றிப் பேசாதே. அஃது உனக்குக் கேடாக முடியும்; போட்டிகள் பெருகும். உன்னை வீழ்த்த மற்றவர்கள் முயல்வர். அடக்கம் அழகு தரும்.