பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


இருக்கலாம். அடிப்படையில் அப்பனைத் தோல் உரித்து போட்டது போல அவன் மகன் இருக்கிறான் என்று பேசக் கேட்கிறோம். இஃது எப்படி? சிந்தித்துப் பார்க்கவும்.

யார் எப்படி என்று கேட்டால் உருப்படியான பதில் கூற, முடியாது. இன்று வாழ்கின்றவர் நாளை தாழ்வோர்; சொல்ல முடியாது. இன்று கோடிக்கு உரியவர் நாளை அவர் ஊர் தெருக்கோடிக்குப் போவதும் சகஜம்தான். ‘அறிவு மேதை’ என்றாலும் ஏதாவது அவசரப்பட்டுச் சில உண்மைகளைத் தெரிவிக்கிறான். உலகம் தாங்காது; அவன் தலைக்கு விலை பேசுவது இன்றைய வெறியாட்டு. யார் எப்படி ஆவார்கள் என்று கூற முடியாது. குபேரன் குசேலனாக மாறலாம்; குசேலன் குபேரனாக மாறலாம் என்று கூறுகிறார்கள். எதுவும் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. இதை வைத்துத்தான் இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை என்று பட்டின்த்து அடிகள் ‘யாரையோ நினைவில் நிறுத்தி இவ்வாறு கூறி இருக்கிறார். எல்லாம் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. நிலவரம் அப்படி; பங்குச் சந்தை விவரம் இப்படி.

அவன் செஞ்சிக் கோட்டை வாலிபன். இவன் வஞ்சிக் கோட்டை இளையவன். இருவரும் ஒரு சாலை மாணாக்கர். ஒரே தட்டில் சோறு, கட்டில் மட்டும் வேறுபட்டன. காரணம் சொல்லத் தேவை இல்லை. காலம் அவர்களைப் பிரிக்கிறது. பிரிந்துவிட்டார்கள். ஒருவன் கோட்டையில் அமைச்சர் பதவி; மற்றவன் எல்லாம் நஷ்டப்பட்டு ஒன்றும் இல்லாமல் படம் எடுத்து 'போண்டி' ஆனவன்; ஆண்டியாகிவிட்டான்.