பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

175


அமைச்சன் இவனுக்கு நண்பன். அமைச்சனைப் பார்த்து உதவி கேட்கச்செல்கிறான். அங்கே ஒரு பி.ஏ.; பட்டதாரி அல்ல; P.A என்பதைத் தமிழில் இப்படித்தான் சொல்கிறார்கள். “ஐயாவைப் பார்க்க இயலாது. அதற்கு முன் அனுமதி தேவை” என்கிறான். இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நண்பன் நடராசன் என்று போய்ச் சொல்” என்று அனுப்புகிறான். “பார்க்க முடியாது” என்று பதில் சொல்கிறான். அன்று ஓசியில் சிகரெட்டுப் பிடித்த இந்தக் காசி விசுவநாதன் இன்று அமைச்சன்; இவன் மனம் நொந்து வீடு திரும்புகிறான். மனைவி கேட்கிறாள் “வெட்கமில்லையா? நண்பன் என்று அலட்டிக் கொண்டாயே” என்று அவள் நையாண்டி செய்கிறாள். அந்த அமைச்சு நடந்து கொண்டது சரியாகபடவில்லை. இவர்களை மாற்றவே முடியாது. பதவியில் உயர்ந்தவர் உதவி செய்யாமல் இருப்பது அவர்களுக்குச் சிறுமை; சீர்கேடு என்று நாலடி நவில்கிறது.

பூச்சூடி வந்த பூவை; அவள் ஊர் புதுவை; அவள் செய்து கொண்டாள் சிலரை வதுவை; அவள் இப்பொழுது விதவை. அவள் திறந்து வைக்கிறாள் கதவை. இன்று அவள் யாருக்கும் உரிமை இல்லை. அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவள் அழகில் மயங்குகிறான்; உள்ளதை இழக்கிறான்; பொருள் வற்றிவிட்டது; அவள் புதுவெள்ளம்; அதில் அவன் அடித்து செல்லப்படுகிறான். பொது மகளிர் உறவும் புது வெள்ளத்தில் வரவும் ஏறக்குறைய ஒன்றுதான். அவை நீடித்து நிற்பவை அல்ல; எனவே பூவையரைக் கண்டு மயங்காதே; புதுமை கண்டு மருளாதே.