பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

177



கட்டிப் பொன் இல்லை என்றால் அவளைக் கட்டித் தழுவ அவள் இடம் தரமாட்டாள்; பட்டு உடை உடுத்திப் பகட்டாக வாழ்ந்தவள். அவன் இன்று தாழ்ந்துவிட்டான் என்றாலும் அவனுக்கு அங்கு இடமில்லை. அழகன்தான் என்றாலும் அவள் சிறிதும் இளகாள். செக்கிழுத்த சிதம்பரம் என்றாலும் மதிப்பில்லை. ‘செக்குக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்றால் அவன் மக்காக இருந்தாலும் அந்த ‘சக்கு’ என்ற அந்தப் பெண் பக்குவமாய் அவனிடம் பழகிப் பணம் பறிப்பாள். அது அவள் குணம்.

பாம்புக்குத் தலை காட்டும்; மீனுக்கு வால்காட்டும்; அது விலாங்கு மீன்; வந்தவரை நாளைக்கு என்று நாள் சொல்லி அனுப்பமாட்டாள். முடிவெட்ட அழைத்து உட்கார வைத்துப் படி என்று கொடுப்பாள் அங்கே பழைய நாளிதழ். அவனை மொட்டை அடித்து விட்டு அனுப்பி கீயூ வரிசையில் யார் ‘வியூ’ என்று அழைத்து அவர்களை அமர்த்துவாள்; சமர்த்து; சாதுரியம் மிக்கவள்; ஆளுக்கு ஏற்றபடி அவள் தளுக்கு; குலுக்கு; அவற்றைக் கொண்டு அவர்களை மகிழச் செய்வாள். அவள் மகிழம்பூ; அது அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப வீசும் மணம் என்பர்.

“பொன்னிற் பதித்த கல் நான்; உன்னை விட்டுப் பிரியேன்” என்றாள். அவளுக்கு அந்த உவமைக்காகவே சரடு ஒன்று வாங்கித் தந்தான். “அன்றில் பறவை நான்; பிரியேன்” என்றாள். இப்படி அவள் பேசிய காதல் உரைகள் பலவற்றில் மயங்கிவிட்டான். ‘அவள் உயிர்; நான் உடல்’ என்று அயர்ந்தான். இப்படி அவள் புதுப்புது உவமைகள் எழுதித் தந்தாள்; அன்று அவள் கவிதை; இன்று அரளி விதை; ஆட்டுக் கிடாய்போல்


12