ரா.சீ.
179
கற்பின் பெருமை
எண்ணிப் பத்துக் காசு இட்டால் இந்திரன் மனைவியும் வெண்ணெய் உருகுவது போல அந்தக் காசு வீசும் கண்ணியவானிடம் செல்வாள் என்று சொல்வார்கள். பிறன் ஆடவன் எவனையும் நோக்காத சீரிய பெண்மை உடையவள் பத்தினி எனப்படுவாள். அத்தகையவளே மாட்சிமை நிரம்பியவள். அவளே மனைவி என்பதற்குத் தகுதி பெறுகிறாள். வாழ்க்கைத் துணைவி என்று கூறிக் கொள்ள அவளுக்கு அருகதை உண்டு. மற்றையவர்கள் ஏதோ ஒட்டி உறவாடுவார்கள் என்றுதான் மதிக்கப்படும். கற்பே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. அத்திண்மை வாய்க்கப் பெறின் பெண்களுள் அவளைவிடச் சிறந்தவள் வேறு ஒருத்தி உளர் என்று உரைக்க இயலாது.
சிக்கனம்
குடத்து அளவு நீர் மட்டும் இருப்பில் உள்ள வறுமை உற்ற காலத்தும் கடலே புரண்டு வருவது போலக் கிளைஞர்கள் சுற்றத்தினர் விருந்து என்று வந்தால் அவர்களை அருந்த வைக்கும் மனத் துணிவும் செயற்பாடும் மிக்கவள் மனைவி அவள் மதிக்கப்படுவாள்.