பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

51


என்று நினைக்க முடியாது; அவை தேய்ந்து போகுபவை.

கூரையைப் பிய்த்துத் தெய்வம் கொட்டுகிறது என்றால் குடைபிடித்துத் தடுக்கமாட்டார்கள். பை பிடித்து நிரப்புவார். செல்வம் வந்தால் வேண்டாம் என்று ‘டாம்’ போட்டுப் பேசார்; ‘ஆம்’ வேண்டும் என்றுதான் கூறுவர்; எங்கே வந்து கொட்டுகிறது? லாட்டரிச் சீட்டுகள் வீட்டுக்குப்பை ஆகின்றன. அவற்றைப் பெருக்கும் கூட்டாளி அவன் மனைவி, இவனை ஒரு ஏமாளி என்று வருணிக்கிறாள்; ‘உங்களுக்கு எல்லாம் வராது’ என்று அடித்துப் பேசுவாள்; படித்துச் சொல்வாள். ‘நாய்க்கு வால் அளந்துதான் வைக்கப்படுகிறது; யார் யாருக்கு இவ்வளவு என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளது” என்பாள்; விளங்கனியைத் திரட்டியதும் இல்லை; உருட்டியதும் இல்லை; களங்கனிக்கு நிறம் கருப்பு, இஃது யார் படைத்த படைப்பு? வரப்போகும் வெள்ளத்தைத் தடுப்பது அரிது; அணைகட்டினாலும் அதுவும் தடுத்து நிறுத்தி விடாது; தரப்போகும் செல்வத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. துன்பமும் இன்பமும் யாருக்கு? எப்படி? எப்பொழுது வரும்? என்று முன்கூட்டி உரைக்க முடியாது; வந்தாலும் அவற்றை அனுபவித்துத்தான் தீரவேண்டும். பருவ மழை தவறிவிட்டால் அதைக் கண்டித்துக் கூட்டமா போட முடியும்? மழை மிக்குப் பெய்து உலகைத் தழைக்கச் செய்தால் அதற்கு நன்றி கூறலாமே அன்றித் தொடர்ந்து பெய்விக்க ஆணையா இடமுடியும்? மழை பொழிவதும் பொழியாமல் ஒழிவதும் இயற்கை நியதி; மானிட வாழ்வு அத்தகையதே.