பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



‘ஒகோ’ என்று உயர வளர்ந்தான்; ‘ஆகா’ அவன் எப்படி வாழ்கிறான்!” என்று உலகம் வியந்தது. நாலு தலைமுறைக்கு என்று அவன் செல்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதபடி நீள் செல்வம் பெற்றவன். அவன் அதை நன்கு வைத்து வாழ்ந்தானா? முரண்படும் மனைவியைப் போல அஃது அவனைவிட்டு விலகிவிடுகிறது. செல்வமும் உரிமையுடன் நடந்து கொள்கிறது. சற்று ஏறுமாறானால் கூறாமல் சந்நியாசம் கொள்கிறது. காரணம் என்ன? அவன் பூர்வ ஜென்மத் தீவினைகள்; விவாகரத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தார்கள்.

நாய் வண்டியில் நாய்களைப் பிடித்துச் செல்லும் ‘நாயகனைப்’ பார்த்து, ‘ஏன்’யா? ‘வெறி பிடித்த நாயை விட்டுவிட்டுக் கறிபிடித்துக் கொழுத்த நாயைக் கட்டி இழுத்துச் செல்கிறாய்?’ என்று கேட்டால் அவன் என்ன சொல்கிறான்?

“இந்த வெறிபிடித்த நாயைப் பிடித்துச் சென்றால் இதை மீட்க யாரும் வரமாட்டார்கள். வெறும் சக்கை; இதற்கு மதிப்புக் கிடையாது. நல்ல கொழுத்த நாய் செல்வர்களுடையது. அதனால் எங்களுக்கு நன்மை உண்டாகும். அவர்கள் எங்களை மதிப்பார்கள்; எமக்குக் காசு கொடுப்பார்கள்” என்கிறான்.

“ஏன்யா” நல்லவர்களை மட்டும் விரைவில் நீ வந்து அழைத்துச் செல்கிறாய்? தீயவர்களை விட்டுச் செல்கிறாய்” என்று எமனைக் கேட்டால் எமன் என்ன சொல்கிறான்? “தீயவர்கள் வெறும் சக்கை; அவர்கள் இந்த உலகத்துக்கே நன்மை இல்லை என்றால் அவர்களை இழுத்துச் சென்று நான் என்ன செய்வது?” என்று பதில் கூறுகிறான்; உயிர் பறிப்பவன்.