பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


உன்னையே நீ அறியச் செய்யும். இதைத்தான் ஞான நன்னெறி என்பர். கல்வி உன்னை மெய்ஞ்ஞானியாக ஆக்கும்; கற்ற கல்விக்குக் கேடு இல்லை. என்றும் நீ இதை மறக்க முடியாது. ‘பாடை ஏறினாலும் ஏடு அதைக் கைவிடக் கூடாது’ என்பர். ‘பாடை’ என்பது மொழி: மொழி நன்கு கற்றுக் கொண்டாலும் கல்வி கற்பதினின்று விட்டு விலகக் கூடாது என்பதே இதன் கருத்தாகும். கல்வியில் ஆர்வலர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர்கள் ஏட்டைக் கைவிடுவது இல்லை; கல்விதான் துயர் தீர்க்கும் மருந்து என்று கொள்வர். கல்வியால் விஞ்ஞானம் பெருகுகிறது; அதனால் புது இயந்திரக் கருவிகள் பெருகுகின்றன. அரிய படைப்புகள் உலகத்தில் மிகுந்த வாழ்வுக்கு வளம் தேடித் தருகின்றன.

களர் நிலத்தில் உப்பு விளைகிறது; அது பிறக்கும் இடம் மட்டமானதுதான்; காலடி எடுத்து வைக்கவும் பின்வாங்குவர்; உப்பளம்; அங்கே மீன் உணங்கல் நாற்றம் வீசும்; கடற்கரை உடற்கு ஒவ்வாது என்றும் கூறுவர். என்றாலும் அந்த உப்பு இல்லை என்றால் எந்தப் பண்டம் எடுபடும்? “உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே” என்பர்; நல்ல விலை கொடுத்து இந்த உப்பை வாங்குவர், களர் நிலம் என்று யாராவது களைவார்களா?

பிறக்கும் இடம் எதுவாயினும் அது சிறக்கும் வகையே மதிக்கப்படும்; சாதிகள் இந்த நாட்டில் நீதிகளைக் கெடுத்துவிட்டன. தாழ்ந்தவன் என்பவன் உழைப்பாளி, உயர்ந்தவன் என்பவன் நூலாளி; படிப்பாளி, சாதிபேதம் என்பதே இந்தப் படிப்பால்தான் உண்டாகிவிட்டது.