பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

71


கலந்து உரையாடி அக மலர்ந்து சிரிக்கும் சிரிப்புக்கு நிகராக எந்த இன்பத்தையும் இணை கூறமுடியாது. அதற்கு ‘செஞ்சொற் கவி இன்பம்’ என்றும், ‘செவி நுகர் கனிகள்’ என்றும் பெயர் கொடுத்து மகிழலாம்.

சோற்றைக் கொட்டினால் வாரி வாரித் தின்கிறான் பசித்துக் களைத்து அலுத்தவன்; ‘பசி ருசி அறியாது’ என்பர். நட்பு நுட்பமானது; பழகி மகிழக் கூடியது; நிலைத்த பயன் பெறுவது. அது சென்று தேய்ந்து இறுவது அன்று. நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக மலர்வது. பட்டினத்தார் கரும்பைச் சுவைத்தாராம்; அடிப்பகுதியிலிருந்து தொடங்கிக் கடித்துச் சுவைத்து வந்தார். நுனிப்பகுதி வந்ததும் கசந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவர் சமாதி ஆகி விட்டார் என்று கதை பேசுகிறது. கரும்பு தின்பதில் ஒரு வரன்முறை உண்டு. அடிப்பகுதி சுவைக்கும்; நுனிப் பகுதி சுவையற்று வெறுமை பெற்றிருக்கும் கற்றவர் நட்பு, தொடக்கத்தில் வெறுமையாகத்தான் காணப்படும்; போகப் போகப் பெருமைதரத் தக்கதாக அமையும். கீழோருடன் தொடர்பு தொடக்கத்தில் “ஆகா என்னே செறிவு!” என்று இருக்கும்; பிறகு வரவரச் சரிவுதான் மிகுக்கும்.

பாதிரிப் பூவை மண் குடத்தில் போட்டு அதில் குளிர் நீர் ஊற்றினால் அது மணக்கிறது; நீர் குடிக்க இனிக்கிறது. கல்லாதவர் கற்றவரைச் சார்ந்து ஒழுகினால் அவர்கள் அறிவு மணம் பெற்று வாழ்வில் ஒளி பெற்றுத் திகழ்வர். கற்க முடியவில்லை என்று அதற்காக மனச்சோர்வு கொள்ளத் தேவை இல்லை. எல்லாரும் பிற எல்லாச் செல்வமும் பெற்றுத் திகழ முடியும். ஒரு சிலரே கல்வி வல்லவராகத் திகழ்வர். அதற்கு நுண்மாண்