பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கஞ்சன்பால் செல்வம் ஒட்டிக் கொள்கிறது. இது வியப்புக்கு உரியது; இந்த நிலை மாறவேண்டும். உடையவர் இல்லாதவர் என்ற பேதம் நீங்கினால் தான் சமுதாயம் சீர்படும்.

தாமரை மலரில் தாள் வைக்கும் பொன்மகளே நன் மக்களை விட்டு விட்டுப் புன் மக்களைக் காக்கிறாள் ; ஏன் ? சிந்தித்துப் பார்க்க வேண்டிய சீர்கேடு இது, பணம் எங்கும் முடங்கிக் கிடக்க கூடாது. அது பொருளாதாரச் சீர்கேடு; இது மாதிரிதான் வாழ்க்கை இன்பமும்.

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று எங்கே அழைப்புக் கிடைத்தாலும் நுழைப்புக்குப் பின் வாங்க மாட்டார்கள் அற்பர்கள் ; மானம் மிக்கவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருந்தாலும் சோறும் நீரும் போதும் என்ற எளிய உணவு உண்டு அமைதி காண்பர். அலைச்சல் என்பது அவர்கள் உளைச்சலில் காணமுடியாது. அலைகிறவர்கள் வாழ்க்கையின் நன்மையைத் தொலைத்தவர் ஆவார்.

நெற்கதிர்கள் நீர் இல்லாமல் வாடுகின்றன. அவற்றை வாழ வைக்கும் பொறுப்பை மேற்கொள்ளாமல் மழை நீர் கடலுள் பெய்கிறது. இதைப் போல் அறிவற்றவர் கைப்பட்ட செல்வம் செறிவு அற்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். வீண் விரயம் ஆக்குகின்றனர். ஏன் என்று கேட்க ஆள் இல்லை; இன்னும் இந்தச் சமூகம் விழிக்கவில்லை.

நுண்ணுணர்வு அற்ற பேதைகள் நூல் பல படித்தாலும் அவர்கள் அறிவு பெருக்கிக் கொள்வது இல்லை :