பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

வறுமை உற்றபோது இவன் வாடி வதங்குகிறான்; அது தெரியாமல் பழகிய சுற்றத்தவர் அவன் வீடு தேடி வந்து விடுகின்றனர். இவன் குரல் கொடுத்துக் ‘குடிக்க’ என்று மனைவியை அழைக்க, அவள், “பிழைக்க வழி இல் லாத நிலையில் இந்த ஜம்பம் எதற்கு?” என்று கேட்க இந்தச் சிக்கல்கள் எழுகின்றன. உள்ளுரில் இருந்து கொண்டு உதவ முடியாமல் இருப்பதைவிட எங்காவது கண்காணாத தேசம் வெளியூர் சென்று பிழைப்பது தக்கது ஆகும். அங்கே யாரும் வந்து இவன் பெயரையும் சொல்லி அழைக்கமாட்டார்கள். வீட்டுக்கு வெளியே அழைப்பு மணி அழுத்தம் இருக்காது.

வறுமையில் சிக்கியவர்கள் வாழ வகையின்றித் தவிக்கும்போது அவர்களிடம் நற்குணங்களை எதிர்பார்க்க முடியாது. ‘வா’ என்று வரவேற்கும் பண்பும் ‘இரு’ என்று சொல்லும் ‘இன்பும்’ எதிர்பார்க்க இயலாது. பெற்ற குணம் விலகும். கற்ற கல்வி தலை எடுக்காது. அறிவு விளக்கமும் அவனை அணுகாது, அன்றாடம் அடுப்பு எரிய வேண்டும். அதைப் பற்றிக் கவலை; மற்றைய ஒளி அவன் காணத் தயாராக இருக்காது.

ஒரு குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்றால் அந்த ‘மகாலட்சுமி’ சோறுபோடுவாள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அவன் அந்த வீடு ‘திருமகள் இல்லம்’ என்று நுழைகிறான். அந்த வீட்டு மருமகள் சொல்கிறாள் “இன்று போய் நாளை வா” என்கிறாள். உடனே சற்று நேரத்திற்குள் மாமியார் வருகிறாள். அவள் என்ன சொன்னாள்? என்று கேட்கிறாள். “நாளை வா என்றார்கள்” என்கிறான் வந்தவன். “இந்த வீட்டில் அவளுக்கு என்ன அதிகாரம்? நான் சொல்கிறேன் இந்தப் பக்கமே எப்பொழுதும் வராதே” என்று திருத்தமாகக் கூறுகிறாள்.