பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


நீண்ட நாள் பழகியவன்; "அவன் வேண்ட உடனே அழைத்துச் சென்று சோறும் நீரும் தந்து அவனை மகிழ்விப்போம்; அவன் மிடிமை தீர்ப்போம். அவனும் நம் வீட்டாரோடு பேசி நலன் விசாரிக்கட்டும். உள்ளம் கலந்து உறவாடுவோம்" என்று இருக்கவேண்டும். செல்வன் ஒருவனைக் காண்கின்றான் பழைய நண்பன் "செல்வோம் உம் வீட்டுக்கு" என்றால்" நில்லாய் முற்றத்தின் கண்" என்று சொல்லித் "தன் கைப்பட அவன் தட்டுச்சோறு வைத்து உண்க" என்பான். நாயினும் கீழாக நடத்தும் முறை இது. உள்ளே அழைத்துச் சென்றால் கள்ளே அனைய காரிகை அவன் மனைவியைக் காமுறுவான் என அஞ்சுறுகிறான். தன் மனைவி மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை. வீட்டுக்கு அழைக்காமல் வீதியில் நிறுத்தி நீதிகள் பேசுகிறான் மனித அபிமானம் நேசம் இவை பசையற்று விட்டன. கீழ்மகன் அவன்; அத்தகையவனை நாடிச் செல்வது கீழ்மையாகும்.

"ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு அஃது இழிவு ஆகும்" என்று மானத்தோடு வாழ்பவன் என்றும் மதிப்பு இழப்பது இல்லை. கை நீட்டி அவன் பிறரிடம் கடன் கேட்பது இல்லை. "நன்கொடை தருக" என்று நவின்றது இல்லை உப்புக்கும் மிளகுக்கும் 'அப்பு' என்று அடுத்த வீட்டை அணுகியது இல்லை. கடிகாரம் நேரம் பார்க்கவும் மற்றவர் கை காட்டு என்று கேட்டதில்லை. எழுதித் தருகிறேன் என்று பிறர் எழுது கோல் அவசரத்துக்கும் அங்கீகரித்தது இல்லை. இவன் இப்பிறவியில் இன்பம் பெறுகிறான்; மறுபிறவியிலும் நல்வாழ்வு அடைகிறான். "யாமார்க்கும் கடன் அல்லோம்" என்ற இறு யாப்பு அஃது அவனுக்குச் செம்மாப்பு.