பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. நடுத்தெருவில் நாற்பது நிமிஷம்


து ஒரு முச்சந்தி. இரண்டு ஹைரோடுகளும் ஒரு தெருவும் சந்திக்கிற இடம் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்ற சந்துகளையும், முடுக்குகளையும் சொல்லிமுடியாது. ஜனக்கும்பலும், காரும் வண்டியும் ஜட்காவும், ரிக்க்ஷாவும் சதா புழங்குகிற இடம்.

இவற்றுக்கெல்லாம் முத்திரை வைப்பது போல அந்த முச்சந்தியின் நான்கு திசைகளிலும் நான்கு வேறு அம்சங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. கலகலப்புக்கும் ஆரவாரத்துக்கும் இவைகளையும் முக்கியமான காரணங்கள் என்று சொல்லலாம்.

வடக்குப் பக்கத்தில் நகரத்தின் ஜெனரல் போஸ்ட்டாபீஸ், மாடியோடு கூடிய பிரம்மாண்டமான கல் கட்டடம்; கட்டடத்தின் முகப்பை எடுத்துக்காட்டும் அழகாகக் கத்தரித்து விடப்பட்ட சவுக்குமர வேலி.

தென்புறத்தில் நகரத்திலேயே பிரபலமான ‘பாங்கு’ ஒன்றின் பெரிய கட்டடம். வெள்ளை வெளேரென்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் நான்கு மாடிக் கட்டடம். வாசலில் முறுக்கிவிட்ட கிருதாவும் கத்தியுமாக விறைத்தது விறைத்தபடியே ஒரு கூர்க்காப் பாராக்காரன் நின்று கொண்டிருக்கிறான். முன்புறம் முழுவதும் அழகான பல குரோட்டன்ஸ் செடிகள். கண்ணைக் கவரும் வண்ண மலர் குலுங்கும் பூந்தொட்டிகள். அதற்கு இப்பால் இரும்புக் கிராதியோடு கூடிய வாயில் - கேட்.

கீழ்ப்புறம் பெண்கள் படிக்கிற கான்வென்ட்ஹைஸ்கூல். அதன் கட்டடம் மஞ்சள் காவி பூசிக் கொண்டு மங்களகரமாகத் தோற்றமளித்தது. பெண்கள், புத்தகமும் கையுமாக உள்ளே போய்க் கொண்டும் வெளியே வந்து கொண்டும் இருக்கிறார்கள்.

மேல்புறம் ரயில்வே கூட்ஸ் ஷெட்டிலிருந்து சாமான்களையும், பார்சல்களையும் விலாசதாரர்கள் வாங்கிக் கொண்டு வருகிற வழியில் பிரதானமான வாசல். கை வண்டிகளும், மேலே மூடப்பெறாத திறந்த லாரிகளும், வேறு வாகனங்களுமாகக் கூட்ஸ் ஷெட்டின் வாசல் ‘ஜே ஜே’ என்றிருக்கிறது.

இந்த வியூகத்தின் நடுவே தென்புறமுள்ள ‘பாங்கு’ கட்டடத்தை ஒட்டி நகர பஸ் நிற்குமிடம் வேறு இருந்தது.

ஐப்பசி மாதத்து அடைமழையில் ஒருநாள் காலை அவசரமாகத் தபாலாபிஸுக்குப் போக வேண்டியிருந்தது. மழை, குடைக்கு அடங்குகிற தினுசாக இல்லை. வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. எப்படியோ ஒரு டாக்ஸியை வாடகைக்கு பிடித்துக் கொண்டு வந்து விட்டேன்.

என் காரியம் முடிந்த போது மழை குறைந்து தூறலாக மாறியிருந்தது. வரும்போது குடைகொண்டு வரவில்லை. நகர பஸ்ஸில் ஏறிப்