பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. எங்கும் இருப்பது

ண்பர் சிவசிதம்பரமும், நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். படிப்புக்குப் பின் எங்கள் வழிகள் வேறு வேறு திசையில் பிரிந்து விட்டன. நான் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியராகப் போனேன். அவர் போலீஸ் இலாகாவில் வேலை பெற்று இன்ஸ்பெக்டர் பதவிக்கு வந்திருந்தார்.

மதுரை வட்டாரத்துக்குள்ளேயே ஒவ்வொரு ஊராக மாறி அவர் இன்ஸ்பெக்டராகவும், நான் ஆசிரியராகவும் வளைய வளைய வந்து கொண்டிருந்தோம்.

அந்த வருடம் எனக்குக் கோடை விடுமுறையின் போது அவர் கோடைக்கானலில் பதவி வகித்து வந்தார். எங்காவது ஒரு சாதாரண ஊரில் அவர் இருந்தாலும் மாதத்துக்கொரு முறை அவரைப் போய்ச் சந்தித்து விட்டு வராவிட்டால் எனக்குப் பொழுது போகாது.

‘என்ன நகர வாழ்க்கை? ஒரே சுழற்சி. ஒரே ஆரவாரம். தினம் விடிந்தால் பத்திரிகைகளின் முகத்தில் விழித்து ஆக வேண்டியிருக்கிறது. ஏதாவது நல்லது கண்ணில் தெரிகிறதா? ‘பெண்ணைக் கடத்திக் கொண்டு போனான், பாங்கில் மோசடி, சென்னையில் நவீனத் திருட்டு, பரீட்சையில் தோல்வியுற்ற மாணவன் தற்கொலை; மூக்குறுத்தான் பட்டியில் மூன்று கால்களோடு பிறந்த கன்றுக்குட்டி!’ சை! உலகத்தில் நல்லதாக ஒன்றுமே நடைபெறாதா?

‘சீ! சீ! தினப்பத்திரிகையும், திரையுலகத்துச் செய்திகளுமே தெரியாமல் ஏதாவதொரு மலைக்காட்டில் போய்ப் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வர வேண்டும்’ என்று அலுத்துப் போயிற்று. பசுமையைக் கண் நிறையப் பார்த்து மனங்குளிர, உடல் குளிர, இயற்கையை அனுபவித்து உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும். கார்ச் சத்தம், இரயில் சத்தம், தார் ரோடு வெயில், காதைப் பிளக்கும் கலகலப்பு - இவற்றையெல்லாம் முழுக்க முழுக்க மறக்க வேண்டும்.

விடுமுறையைக் கழிப்பதற்கும், வெயில் காலத்துக்கும் ஏற்ற கோடைக்கானலிலேயே நண்பர் சிவசிதம்பரம் இருக்கும் போது போகாமல் இருப்பேனா? நிலப்பகுதி ஊர்களில் வெப்பம் அரசு செலுத்திக் கொண்டிருக்கும் அந்த மூன்று மாதங்களும் கோடைக்கானல் சொர்க்கந்தான். பதினைந்து நாட்கள் ஒய்வாகத் தங்கி விட்டு வரும் நோக்கத்தோடு சிவசிதம்பரத்துக்கு முன் கடிதமும் எழுதிப் போட்டுவிட்டுப் புறப்பட்டேன்.