பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

சிவசிதம்பரம் ஆவலோடு வரவேற்றார். ஆகா! கோடைக்கானல் கோடைக்கானல்தான்! எத்தனை உயரமான மலைச்சிகரங்கள்! எவ்வளவு அருவிகள்! பல வண்ண மலர்கள், செடிகள், கொடிகள், எப்போதும் பாலாவி போல் மெல்லிய மேகங்கள் மூட்டமிட்டுக் குளிர்ச்சியாக இருக்கும் சூழ்நிலை.
“சிவசிதம்பரம்! இந்த ஊரில் இருக்கிற வரையில் நீர் கொடுத்து வைத்தவர்தான் ஐயா!” என்று வியந்து கூறினேன். சிவசிதம்பரம் அலட்சியமாக சூள் கொட்டி விட்டுச் சிரித்தார்.
“கொடுப்பதாவது வைப்பதாவது? போலீஸ் உத்தியோகத்திலிருப்பவனுக்கு எந்த இடத்தில் இருந்தாலும் ஒரே மாதிரிதான் எங்கள் வேலை துன்பம் நிறைந்தது. துன்பத்தைத் தேடிக் கொண்டு போவது. சில சமயத்தில் மட்டும் துன்பத்தைப் போக்குவது” என்று அலுத்துக் கொண்டார் அவர்.
“என்ன ஐயா இது? பணத்தைப் பணம் என்று பாராமல் செலவழித்துக் கொண்டு 'சீஸனை' அனுபவிப்பதற்கு எங்கிருந்தெல்லாமோ இங்கே வருகிறார்கள். நீரோ இந்த இடத்திலேயே இருந்து கொண்டு அலுத்துக் கொள்கிறீரே?”
“உங்களை மாதிரி ஒரு வாரம், இரண்டு வாரம் வந்து தங்கிவிட்டுப் போகிறவர்களுக்கு எல்லாம் சுகம்தான். மலையையும் பசுமையையும் பார்த்து மனம் நிறையலாம். நாங்கள் இங்கே வந்தாலும், திருடனையும், கொலைகாரனையும் தானே பார்த்துத் தேடிப் போக வேண்டியிருக்கிறது.”
“யாரை வேண்டுமானாலும் தேடிக் கொண்டு போங்கள். நான் ஊருக்குப் போனபின் அதையெல்லாம் வைத்துக் கொள்ளலாம். சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கேயாவது கிளம்பிப் போய்விடாதீர்” என்று பீடிகை போட்டுக் கொண்டேன் நான்.
கோடைக்கானலில் சிவசிதம்பரம் குடியிருந்த வீடு கோக்கலை வாக் என்ற பகுதியை ஒட்டி ஒரு மேட்டில்அமைந்திருந்தது. வீட்டைச் சுற்றி யூகலிப்டஸ் மரங்கள். பச்சைப் புல்வெளி. அதில் சித்திரக்காரன் அள்ளித்தெளித்த வர்ணங்கள் போல் பல நிற மலர்ச்செடிகள். தூரத்தில் மலைப் பள்ளத்தாக்கினிடையே இயற்கை பதித்துவைத்த பெரிய கண்ணாடியைப் போல் ஏரி. அப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் றுகொண்டு புடைத்தெழுந்த இயற்கையின் பசுமை வீக்கம் போல் மேகம் படிந்த மலைகள். மலைச் சரிவுகளில் படிப்படியாகப் பாத்தி எடுத்துக் காய்கறிகள் பயிர்செய்திருந்தார்கள்.மரங்கள் அடர்ந்துதெரிந்த பகுதிகளெல்லாம் சிலபேருடைய தலையில் அடர்ந்து 'கர்லிங்' விழுந்த மயிர்ச்சுருள்கள் போல் நெளிந்தன. ஒருவேளை மலைமகளின் கரிகுழற் சுருளோ அந்த அடர்த்தி?
“வெந்நீர் தயாராயிருக்கிறது: உள்ளே போய்க் குளித்துவிட்டு வாருங்கள்; சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பலாம். ஜீப் எடுத்துக்கொண்டு வரச் சொல்லி ஸ்டேஷனுக்குச் சொல்லிவிட்டிருக்கிறேன்” என்று சிவசிதம்பரம் துரிதப்படுதினார்.