பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / எங்கும் இருப்பது ★ 117



"வாத்தியார் மாமா வந்திருக்கிறார்” என்று கூச்சலிட்டுக் கொண்டு வந்து சூழ்ந்து கொண்ட சிவசிதம்பரத்தின் குழந்தைகளுக்கு உரிய பொருள்களைக் கொடுத்து அனுப்பியபின் குளிக்கக் கிளம்பினேன். கோடைக்கானலில் குளிரில் ஆவி பறக்க உலைநீர் போல் கொதித்த வெந்நீர்கூட ஒரு சூடாக உடம்பில் உறைக்கவில்லை.

சாப்பாடு முடிந்ததும் ஜீப்பில் சுற்றிக் காட்டுவதற்காக என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார் நண்பர். காலையில் பத்துப் பதினோரு மணி இருக்கும் அப்போது. நண்பகல் இரண்டு மணிக்குள் கோடைக்கானலின் கிழக்குப் பகுதி முழுவதும் நாங்கள் சுற்றிப் பார்த்துவிட்டோம்.

சில்வர்காஸ்கேட் அருவி, செண்பகனூர் பெருமாள் மலைச்சிகரம், குறிஞ்சி ஆண்டவர் கோவில், ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போதும் உலகத்து ஒசைகளே இல்லாத அந்த மலைச்சாலைகளில் சுற்றும்போதும் எத்தனை இன்பமாக இருக்கிறது!

“சிவசிதம்பரம்! மண்ணுலகத்துத் துன்பங்களே தெரியாமல் வாழ வேண்டுமானால் இந்த மலைத் தொடர்களில் எங்கேயாவது ஒரு வீடு கட்டிக் கொண்டு ஒதுங்கி வாழ வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மெல்லச் சிரித்தார்.

“இதுவும் மண்ணுலகம்தான்! இங்கும் மண்ணுலகத்துக் கவலைகள், மோசடிகள், சூது, வாது, கொலை, கொள்ளை எல்லாம் உண்டு. என்னோடு இரண்டு நாட்கள் இருந்தால் தெரியும்” என்றார்.

“சே! சே! இந்தப் போலீஸ் ஆட்களுக்கு இயற்கையழகை அனுபவிக்கவே தெரியாதா? எங்கு போனாலும், எதைப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, மோசடிதானா? நல்ல ஆள் ஐயா! உம்மோடு சுற்றிப்பார்க்கவந்தேனே?” என்று பொய்க் கோபத்தோடு அவருக்குச்சூடுகொடுத்தேன்நான்.அவர் பதில் சொல்லாமல் சிரித்தார்.

வீட்டுக்குப் போய்ச் சிற்றுண்டி காப்பியை முடித்துக்கொண்டு மறுபடியும் ஜீப்பில் புறப்பட்டோம்.

ஏரிக்கரையில் போட் கிளப்புக்கு அருகே ஏழு ரோடுகள் பிரியுமிடத்தில் ஜீப் நின்றது. படகுத்துறைக்கு அருகில் அழைத்துப் போய் ஏரியைக் காட்டினார் சிவசிதம்பரம்.

அங்கே வைரமும் தங்கமும் இழைத்துப் பூட்டினாற்போல் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு பட்டுப்பூச்சிகள் போல் இரண்டு அழகிய இளம்பெண்கள் அப்போதுதான் ஒரு படகில் கிளம்பிக் கொண்டிருந்தனர். முப்பது முப்பத்திரண்டு வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் மேனாட்டு முறையில் நாகரிகமாக உடையணிந்து அந்தப்படகின் துடுப்பை வலித்துச் செலுத்திக்கொண்டிருந்தார்.அந்தப் பெண்களில் ஒருத்தி அவருடைய மனைவியாகவும் மற்றொருத்தி அவருடைய சகோதரியாகவும் இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

“சிவசிதம்பரம்! கோடைக்கானலை என்ன மாதிரி அனுபவிக்கிறார்கள் பார்த்தீர்களா? இப்படிக் குடும்பத்தோடு இயற்கையை அனுபவிக்கப் புறப்படும்