பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / எங்கும் இருப்பது ★ 119



முடித்த கன்னிகைபோல் மிக அழகாக இருப்பதாக ஒரு கற்பனை உதயமாயிற்று எனக்கு.

வீட்டுக்குத் திரும்பியதும் கேக்கர்ஸ் வாக் மலையிலிருந்து கீழே பள்ளத்தில் இருக்கும் ஊர்களை வேடிக்கை காண்பித்தார் நண்பர். இரவில் அந்த ஊர்களின் விளக்குகள் மின்மினிப் பூச்சிகளாகத் தெரிந்தன.

ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் ஊரடங்கிவிட்டது. குளிர் தாங்க முடியவில்லை. மூச்சுப் பலமாக விட்டால் மூக்கிலிருந்து புகை வருவது மாதிரி தெரிந்தது.

சூடான இரவு உணவு வாய்க்கு ருசியாக இருந்தது. சாப்பாடு முடிந்து வெற்றிலை போட்டுக் கொண்டதும், "பேப்பர் பாருங்கள்” என்று நாலைந்து தினசரிகளைக் கொண்டு வந்து என் முன்னால் போட்டார் அவர்.

"ஐயோ! பத்துப் பதினைந்து நாட்களுக்கு இந்த சனியன்களை என் கண்ணில் காட்டாதீர்கள். இவைகளைப் பார்க்கக் கூடாதென்றுதான் இங்கு வந்திருக்கிறேன்” என்று வெறுப்போடு அவற்றை மடித்துத் தூக்கி எறிந்தேன். சிவசிதம்பரம் சிரித்துக் கொண்டே அவற்றை எடுத்து நிதானமாக ஒவ்வொன்றாகப் பாராயணம் செய்வதுபோல் படித்த பின்புதான் என் பக்கம் திரும்பினார்.

"ஏன் ஐயா, உம்மால் எப்படி இவற்றைப் பொறுமையாகப் படிக்க முடிகிறது? பக்கத்துப் பக்கம், வரிக்கு வரி கொலை, கொள்ளை, மோசடி, சோரம் போனவள், தவிர வேறு ஏதாவது நல்ல சமாசாரம் இவற்றில் இருக்கிறதா?” என்று அவரைக் கேட்டேன் நான். பதில் சொல்லாமல் எல்லா உண்மைகளும் புரிந்த வேதாந்தியைப் போல் அந்தப் பழைய சிரிப்பைக் காட்டினார் அவர்.

காலையில் நான் எழுந்திருக்கும்போது ஏழரை மணி. எனக்கும் முன்பே எழுந்திருந்து உத்தியோக உடையுடன் எங்கோ புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார் சிவசிதம்பரம்.

“என்ன? எங்கோ கிளம்புகிறார் போலிருக்கிறதே?” என்றேன்.

"ஸ்டேஷனிலிருந்து அவசரமாக ஜீப் வந்திருக்கிறது. நான் போகவேண்டும். நீங்களும் பல் விளக்கிக் காப்பியைக் குடித்துவிட்டு, உடன் வாருங்கள். அப்படியே ஸ்டேஷனிலிருந்து நாம் சுற்றிப் பார்க்கக் கிளம்பலாம்” என்றார் அவர்.

நானும் அவசர அவசரமாகப் பல் விளக்கிக் காப்பி சாப்பிட்டுவிட்டு அவரோடு புறப்பட்டேன். ஜீப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது.ஹெட்கான்ஸ்டபிள் வந்து சலாம் வைத்தார்."சார் லேக் வியூ லாட்ஜ்லிருந்து அவசரமாகப் போன் செய்தார்கள்" என்று கூறினார் அவர்.

ஜீப்பில் இரண்டு கான்ஸ்டபிள்களையும் ஏற்றிக் கொண்டு லேக்வியூ லாட்ஜுக்கு விடச் சொன்னார் சிவசிதம்பரம். பத்தே நிமிடங்களில் கார் லேக்வியூ லாட்ஜின் வாசலில் போய் நின்றது. லாட்ஜின் முதலாளி பரபரப்போடும், பதற்றத்தோடும் இன்ஸ்பெக்டரை வரவேற்றார். நானும் சிவசிதம்பரத்தோடு கூடவே சென்றேன்.