பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



மூன்றாவது மாடியில் பதின்மூன்றாம் நம்பர் அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார் லாட்ஜ் சொந்தக்காரர். அறை வாசலில் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இரண்டு இளம் பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்கியதும் அவர்கள் இன்னாரென்று எனக்குத் தெரிந்துவிட்டது. முதல் நாள் மாலை ஏரிக்கரையில் படகில் பார்த்த பெண்கள் தான் அவர்கள். லாட்ஜ் முதலாளி இன்ஸ்பெக்டர் காதருகில் சென்று ஏதோ கூறினார்.

இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்களுக்கருகில் போய் நின்று கொண்டு பதவியின் கடுமையோடு அவர்களைப் பற்றி விசாரித்தார்.

அந்தப் பெண்கள் மதுரையில் ஒரு பெரிய கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்றும் கல்லூரியில் படிப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.

“எதற்காக இங்கே வந்தீர்கள்? யாரோடு வந்தீர்கள்?”

அந்தப் பெண்கள் ஒன்றும் பதில் கூறாமல் ஒரு ஆங்கிலத் தினசரியின் ‘கட்டிங்' தாளை எடுத்து வந்து அவரிடம் நீட்டினார்கள்.

அது ஒரு விளம்பரம் அதில் சினிமாவில் நடிக்கப் படிப்பும், புதுமைக் கொள்கைகளுமுள்ள அழகான புதுமுகங்கள் தேவையென்றும், விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தங்கியிருக்கும் எமது புரொட்யூசரையும், டைரக்டரையும் நேரில் சந்திக்கவேண்டியது என்றும் குறிப்பிட்டுக் கோடைக்கானலில் அந்த லாட்ஜின் விலாசத்தோடு நம்பரும் குறித்திருந்தது.

“அட பைத்தியங்களா? படித்திருக்கிறீர்களே? இதை நம்பிக் கொண்டு வந்தீர்களா? நீங்கள் என்று இங்கு வந்தீர்கள்? வரும்போது யார் இங்கு இருந்தார்கள்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"நேற்று காலையில்தான் இங்கு வந்தோம். ஒரே ஒரு நடுத்தர வயது மனிதர் 13-ம் நம்பர் அறையில் இருந்தார். அவரை லாட்ஜ் காஷியருக்கும் தெரியும். தான் அந்தச் சினிமாக் கம்பெனியின் டைரக்டர் என்றும் புரொட்யூசர் இரண்டு நாட்களில் மதராஸிலிருந்து வந்துவிடுவாரென்றும் கூறி, எங்களுக்குத் தங்க வசதி செய்து கொடுத்தார் அவர்”

"அப்புறம் என்ன நடந்தது?”

"நேற்று மாலை பூராவும் அவரோடு ஊர் சுற்றிப் பார்த்தோம்.”

"அப்புறம்”

“இன்று தாலையில் எங்கள் நகைகளையும் காணவில்லை; அவரையும் காணவில்லை.

“எவ்வளவு பெறுமானமுள்ள நகைகள்?”

"இரண்டுபேருடையதும் சேர்த்துப் பத்தாயிரத்துக்குத் தேறும்! இங்கே திருட்டுப் பயம் அதிகம் என்றும் நகைகளைக் கழற்றி வைத்து விட்டுப் படுத்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றிரவு அவர்தான் சொன்னார்”