பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / எங்கும் இருப்பது ★ 121



"அதை வேத வாக்காக நம்பினீர்கள், இல்லையா?” இன்ஸ்பெக்டர் இரைந்தார்.

"ஸ்டேஷனுக்கு வந்து விரிவாக ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்கள். உங்கள் பெற்றோர் விலாசம் இப்போது வேண்டும்” என்று எழுதி வாங்கிக் கொண்டார்.

“என்ன ஐயா? பார்த்துக் கொண்டீரா?” சிவசிதம்பரம் என் பக்கமாகத் திரும்பிக் கேட்டுவிட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பைச் சிரிக்கும்போது அவர் சாதாரணப் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதிரித் தெரியவில்லை. துன்பங்களைக் கேட்டுப் பார்த்து மரத்துப்போன வேதாந்தியாகவே தோன்றினார்.

லாட்ஜின் வாசலில் இறங்கி நடந்தபோது முதல் நாள் பூப்பு நீராடிய கன்னிகை மாதிரித் தோன்றிய கோடைக்கானலின் இயற்கை வனப்பு ஒரு குட்டரோகம் பிடித்த கிழவியைப் பார்த்த மாதிரி அருவருப்பாக இருந்தது.

உலகத்தில் மோசடி, ஏமாற்று இல்லாத இடமே கிடையாது போலும். மனிதக் காலடி படுகிற இடமெல்லாம் அவையும் இருக்கின்றன.

“சிவசிதம்பரம்! நான் சாயங்காலம் கடைசிக் காருக்கு ஊர்திரும்ப வேண்டும்!”

"ஏன்? பதினைந்து நாட்கள் இருக்கப் போவதாக அல்லவா சொன்னீர்கள்?”

“இல்லை. ஊரில் கொஞ்சம் வேலை இருக்கிறது!”

அவர் சிரித்தார். எத்தனையோ உலகியல் உண்மைகளைச் சீரணித்து அனுபவப்பட்ட சிரிப்பு அது.

(கல்கி, 28.6.1957)