பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“நீசும்மா இரு அக்கா! எங்களுக்குள் ஒரு சிறு விவாதம்... இதில் நீ தலையிடாதே..."

“எப்படியாவது போ” என்று அவள் உள்ளே போய் விட்டாள். நான் இன்னும் மைத்துனனுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. விழிகளை இமையாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அவனுடைய இளமை கொஞ்சும் முகத்தில் அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிவெறி தாண்டவமாடியது. முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.நமது கேள்விக்கு எதிரியிடம் பதில் இல்லை என்கிற மாதிரி தெம்பும் பலமும் அவன் கண்களில் ஒளியிட்டிருந்தன. நான் பதில் சொல்லாமல் மெளனமாயிருப்பதைத் தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்ட அவன் மேலும் மடக்க ஆரம்பித்துவிட்டான்.

"அத்தான்! நீங்கள் மார்க்ஸ், இங்கர்சால், சி.இ.எம். ஜோட் ஆகியவர்கள் எழுதிய அறிவு நூல்களைப் படித்திருக்கிறீர்களா?”

“.....”

“போகட்டும்! நம்முடைய வழிபாடு முழுவதும் ஒரு போலித்தனம். உண்மைக் கலப்பற்ற பொய். தெய்வத்தைப் போல இருப்பதெல்லாம் தெய்வமென்று எண்ணி மயங்குகிறோம் நாம். ரயில்வே ‘கைடு’ ரயிலாகி விடுமா? அதில் ஏறிப் பிரயாணம் செய்வதற்கு முடியுமா?”

“.....”

“இந்தப் போலியான சமயமும் போதை தரும் பாவனைகளும் சமூகத்தை ஏமாற்றுகின்றன என்கிறார் கார்ல் மார்க்ஸ்”

“....”

“என்னுடைய கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.அதனால்தான் மெளனம் சாதிக்கிறீர்கள்.”

நான் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. மேடையில் முழங்கும் அடுக்குமொழிச் சொற்பொழிவாளர்களையெல்லாம் தன்னிடம் பிச்சைவாங்கும்படி செய்துவிட்டான் என் மைத்துனன்.

“நீங்கள் சிரித்து மழுப்புவது நியாயமில்லை.”அவன் மறுபடியும் பலமாகக் கூச்சல் போட்டான்.

“நல்லது! உனக்கு அருமையான மூளை வாய்த்திருக்கிறது, அப்பா. என்னைவிட எவ்வளவோ அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறாய். நான் மார்க்ஸ், இங்கர்சால், ஜோட் ஆகியவர்களைப் படிக்கவில்லை. சங்கரர், மாணிக்கவாசகர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியவர்களைப் படித்து ஏமாந்து விட்டேன்!”

"அத்தான்! நீங்கள் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே என்னைக் கேலி செய்கிறீர்கள்.”