பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெய்வத்தால் ஆகாதெனினும் ★ 135



“இப்போது எங்களுக்குக் கோவிலுக்கு நாழிகையாகிவிட்டது. உனக்குச் சினிமாவுக்கு நாழிகையாகிவிட்டது. நாளைக்கு வைத்துக் கொள்வோம்.” நான் அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

“இதென்ன இவ்வளவு முரட்டுத்தனமும் அசட்டுத்தனமும் இவனுக்கு எங்கிருந்து வந்தன?” அவன் தலை மறைந்ததும் ராஜம் என்னைக் கேட்டாள்.

“அசட்டுத்தனமில்லை, இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்கிறது. நீ புறப்படு. கோவிலுக்குப் போக நேரமாகிவிட்டது” என்றேன். இதற்குப்பின் அந்தப் பேச்சு எழவில்லை. கோவிலுக்குப் புறப்பட்டோம்.

கோவிலிலிருந்து புதுமண்டபம் வழியாக ராயகோபுரத்தின் வாசலுக்கு வந்தோம். அங்கிருந்த மரப்பொம்மைக் கடை ஒன்று குழந்தை கண்ணில் பட்டுவிட்டது. பொம்மைக் கடையைப் பார்த்தாளோ, இல்லையோ, ஏதாவது ஒரு பொம்மை வாங்கிக் கொடுத்தால்தான் அங்கிருந்து கிளம்புவேன் என்று அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள் குஞ்சு. நானும் ராஜமும் குழந்தையின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிச் சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு போக முயன்றோம். எங்கள் முயற்சி பலிக்கவில்லை.

“பொம்மை! எனக்குப் பொம்மை வேணும்.அதோ அந்த யானைப் பொம்மையை வாங்கிக் கொடு!”குழந்தை அழுது கொண்டே புதுமண்டபத்துக் கல்தரையில் உருண்டு புரளத் தொடங்கிவிட்டாள்.

"சார்! குழந்தை ரொம்ப அழுகிறது. நாலணாத்தானே? ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்!” - கடைக்காரன் வேறு சிபாரிசுக்கு வந்தான்.

போனால் போகிறதென்று நாலனா கொடுத்து அந்த யானைப் பொம்மையை வாங்கிக் குழந்தையிடம் அளித்தேன். அழுகை நின்றது. கோடைக் காலத்தில் மழை எப்போது நிற்குமென்றும் தெரியாது. குழந்தைகளுடைய ஆசையும் பிடிவாதமும் கோடை மழைபோல. வீட்டுக்குத் திரும்பியதும் குழந்தை அந்த யானைப் பொம்மையோடு தன் விளையாட்டைத் தொடங்கிவிட்டாள். எங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ராஜம் இரவுச் சாப்பாட்டுக்காகச் சமையலைக் கவனிக்கப் போனாள். யானைப் பொம்மையைக் கிணற்றடிக்குக் கொண்டு போய்ச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டுவது, பவுடர் பூசி விடுவது இந்த மாதிரி குழந்தைத்தனமான காரியங்களைக் குஞ்சு செய்து கொண்டிருந்தாள். ஒரு ரஸிகனின் மனோபாவத்தோடு அதைச் சிறிது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“பொம்மை வாங்கி முழுசாக ஒரு மணிநேரம்கூட ஆகவில்லை! அதற்குள் இந்தக் குழந்தை மனம் அத்துடன் எவ்வளவு நெருங்கிய ஒட்டுறவு கொண்டாடுகிறது?’ என்று சிந்தித்தேன். ஏதோ காரணகாரியத் தொடர்பற்று சிந்தனைகள் அலைமோதின.

‘என் கையில் இதே யானைப் பொம்மையைக் கொடுத்துச் சோப்புப் போட்டு விடவும், பவுடர் பூசவும் சொன்னால் நான் பொறுமையோடு செய்வேனா?