பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



குழந்தையின் அறியாமை அதற்கு இன்பத்தைக் கொடுக்கிறது. எனக்கு அறிவு தெளிந்துவிட்டதனால் அந்த இன்பத்தை அடைய முடியாது.”

இப்படிச் சிறிதுநேரம் சிந்தித்துவிட்டுப் படிப்பதற்காக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்தேன். அது ‘அலெக்ஸில் காரல்’ எழுதிய அறியப்படாத மனிதன் - ‘மேன் தி அன்னோன்’ என்ற புத்தகம். ஆனால் புத்தகத்தில் மனம் லயிக்கவில்லை.

‘மனிதனுக்கு எல்லாவற்றிலும் கட்டுப்பாடு இருப்பது போல அறிவு வளர்ச்சியிலும் கட்டுப்பாடு வேண்டும். அறிவு மீறி வளருமானால் நல்லது பொல்லாதது எதையுமே நம்பும் சக்தி குறைந்துவிடும்.நாஸ்திகம் தோன்றும் காரணமே அது’. இப்படிச் சில வரிகள் மின்வெட்டுப் போல் என்மனத்தில் ஆழமாகப் பதிந்தன.

மைத்துனன் பார்க்கப் போயிருந்தது ஆங்கில சினிமா. அதனால் ஒன்பதேகால் மணிக்கே படம் விட்டு வந்து சேர்ந்தான். நானும் அவனும் குஞ்சுவும் சாப்பிட உட்கார்ந்தோம். குஞ்சு தன் இலைக்குப் பக்கத்தில் யானைப்பொம்மையை உட்கார்த்தி அதற்கு முன்பும் ஒரு சிறு இலையைப் போட்டிருந்தாள். ராஜம் அந்த இலையில் ஒன்றும் பரிமாறாமல் போகவே அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

"அது மரப்பொம்மையடீ !சாப்பிடாது.” “மாட்டேன் போ! அதற்குப் போட்டால்தான் நானும் சாப்பிடுவேன்.”

வேறு வழியின்றி அந்த இலையிலும் பரிமாறி விட்டுப் போனாள் ராஜம்.

சாப்பாடு முடிந்தது. படுக்கையில் குழந்தையை விட்டபோது யானைப் பொம்மையையும் பக்கத்தில் விட்டால்தான் தூங்குவேன் என்றாள். அப்படியே செய்தேன்; குழந்தைக்குப் பொம்மையிடம் ஏற்பட்ட பாசம் வேடிக்கையானதாக இருந்தது. மைத்துனன் வந்தான்.

“என்ன அத்தான்? என் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறீர்களா?”

“மணி பத்தரை, தூக்கம் இமைகளை அழுத்துகிறது. காலையில் சொல்கிறேன். நீயும் போய்த் தூங்கு” என்று அவனை அனுப்பினேன்.

பொழுது விடிந்தது.கோயில் யானைநாள்தோறும் அபிஷேகத்திற்கு நீர் கொணர எங்கள் தெரு வழியே போகும். சனிக்கிழமைகளில் மட்டும் அந்த யானைக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்துப் பழக்கப்படுத்தியிருந்தேன். இதனால் யானை மாவுத்தன் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் வீடு வந்ததும் யானையை நிறுத்திவிட்டு, "சார், வாழைப்பழம்" என்று குரல் கொடுப்பான்.

அன்று சனிக்கிழமை என்பது நினைவிலிருந்தும் பழம் வாங்கி வைக்க மறந்துவிட்டேன். தெருக்கோடியில் யானையைக் கண்டதும் மைத்துனனைக் கடைக்கு விரட்டினேன். அவன் அப்போது குஞ்சுவைத் தோளில் தூக்கி ‘உப்பு மூட்டை’ கொண்டிருந்ததனால் அவளையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனான்.