பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெய்வத்தால் ஆகாதெனினும் ★ 137



அவன் பழத்தோடு திரும்பி வருவதற்கும் யானை மாவுத்தன், வீட்டுவாசலில் யானையைக் கொணர்ந்து நிறுத்துவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

ஒரு சீப்புப் பழத்தில் ஒரு பழத்தை மட்டும் குழந்தையிடம் கொடுத்துவிட்டு மற்றவற்றை யானைக்குக் கொடுத்தேன்.

"குஞ்சு! அந்த ஒரு பழத்தை உன் கையாலே யானைக்குக் கொடேன்.”

"ஐயோ பயமாயிருக்கு! நான் மாட்டேன்” என்று குழந்தை அலறிக் கொண்டே உள்ளே ஒடிவிட்டாள். நான் மீண்டும் அவளைப் பிடித்து வந்து யானைக்குப் பழம் கொடுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுத்தினேன். குழந்தை பயந்து வீறிட்டுக் கதறினாள். யானையருகே நெருங்கவே அஞ்சினாள்.

“விடுங்க அத்தான்! குழந்தை பயப்படுகிறாள்” என்று மைத்துனன் கூறினான்.நான் குஞ்சுவைக் கீழே இறக்கி விட்டுவிட்டேன். அவள் கையிலிருந்த பழத்துடன் வீட்டுக்குள்ளே ஒடிவிட்டாள். யானைக்காரன் யானையைச் செலுத்திக் கொண்டு போய்விட்டான். நானும் மைத்துனனும் உள்ளே வந்தோம்.

"அத்தான்! என்னை ஏமாற்றிக் கொண்டேபோகிறீர்களே? என் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே” அவன் முதல் நாளைய விவாதத்தைக் கிளப்பினான்.

“உஷ்! இரையாதே. அதோ மூலையிலே பார்! உன்னுடைய கேள்விக்குப் பதில் அங்கே இருக்கிறது!”

மைத்துனன் ஆச்சரியத்தோடு நான் சுட்டிக்காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தான்.

அங்கே குழந்தை குஞ்சு உயிருள்ள யானைக்குக் கொடுக்க மறுத்த வாழைப்பழத்தை உரித்துத் தன்னுடைய பொம்மை யானையின் வாயில் திணிக்க முயன்று கொண்டிருந்தாள்.

“சாப்பிடு யானை! சாப்பிடு! ஏன் முழுங்கவே மாட்டேங்கிறே?"திருந்தாத மழலை மொழியில் வேண்டினாள்.

“பார்த்தாயா?”

“எதை?”

"அந்தக் காட்சியை”

“பார்த்தேன், அதற்கென்ன?”

“நேற்றுக் கூறினாயே; பாரத நாட்டின் பக்தி மார்க்கம் வெறும் பாவனை, போலித்தனம் என்றெல்லாம். அந்தக் கருத்தை இப்போது தெரிந்து கொள்!”

“விளங்கவில்லையே?”