பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. வாழ்வில் நடவாதது

ரத வித்யா பவனத்தின் கலாசாலைக் கட்டடங்களுக்கு மேல் குடை பிடிப்பது போல் தென்னை முதலிய மரங்கள் பசுமைச் சூழலை உண்டாக்கியிருந்தன. யுவதிகளுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டியக் கலையின் பல்வேறு அம்சங்களையும் இசையையும் கற்பிக்கும் கலாசாலைதான் அது. நந்தகுமார் என்று ஒரு இலட்சியவாதி, தம்முடைய உடல், பொருள், ஆவி, கலைத்திறன் ஆகிய எல்லாவற்றையும் செலவிட்டு அந்தப் பரத வித்யா பவனத்தின் கலாசேவைக்கு ஆதார சுருதியாக இருந்து கொண்டிருந்தார். எல்லைக்கு உட்படாத கலையின் பிரவாக சக்திக்குக் கலாசாலை என்ற பெயரில் உன்னதமான இலட்சிய எல்லையைக் கோலி வளர்த்து வந்தார் அவர். இயற்கையழகு மிக்க கேரள தேசத்தில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலுள்ள வளமான கிராமம் ஒன்றில் பரத வித்யா பவனம் அமைந்திருந்தது.

மனோரம்மியமான ஒரு மாலைப் பொழுது. திருமணம் நடக்கிற போது கள்ளத்தனமான ஒரக் கண்களால் கணவனை நோக்க முயலும் மணமகளின் விழிகளைப் போலக் கதிரவன் மேக முகமூடியில் மறைந்து உலகத்தைக் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். மலைச் சாரலின் குளிர்ந்த பூங்காற்று உல்லாசம் நிறைந்த எண்ணங்கள் போலப் புறத்தே வீசிக் கொண்டிருந்தது. எங்கும் குளிர்ந்த சூழ்நிலை. வித்யாபவனத்தில் ‘பரதநாட்டிய வகுப்பு முடிந்து, மாலைக் கால மணி அடித்து வெகு நேரம் ஆகி விட்டது. மரகதக் கம்பளத்தின் மேல் பட்டுப் பூச்சிகளைப் பறக்க விட்டாற் போல, இளைஞர்களும், யுவதிகளும் தத்தம் சிநேகிதர்கள், சிநேகிதிகள் கோஷ்டியோடு உலாவப் புறப்பட்டு விட்டார்கள்.

வாணி, அச்சன் ஓடைக் கரையில் உட்கார்ந்திருந்தாள். தில்லைநாதன் இன்னும் வரவில்லை. கரையோரத்து மகிழ மரத்திலிருந்து உதிர்ந்த மகிழங் கொட்டைகளை எடுத்து, ஒவ்வொன்றாக ஓடை பரப்பில் எறிந்தாள். அது ஒரு வேடிக்கையான விளையாட்டாக இருந்தது அவளுக்கு. தில்லைநாதன் வந்து சேர்கின்ற வரை தனிமையை எப்படியாவது கழிக்க வேண்டுமே? அது இந்த விளையாட்டின் மூலம் இனிமையாகக் கழிந்து கொண்டிருந்தது. தண்ணிரில் ‘குபுக்’கென்று விழுந்த மகிழங்கொட்டை வளையம் வளையமாகச் சுழன்று விரியும் தரங்கங்களைத் தோற்றுவித்தது. தரங்கங்கள் விரிந்து விரிந்து இறுதியில் குறுகிக் குறுகி, தோன்றிய இடத்திற்கே வந்து ஒடுங்கின, மூலத்திலே தோன்றி முடிவில் மூலத்திலேயே ஐக்கியமாகும் பிரகிருதியைப்போல.

மகிழங்கொட்டைகளை ஒவ்வொன்றாக மெல்ல லய சுகத்தோடு அவள் வீசி எறிந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து ஒரு பெரிய கல் தண்ணீரில் வந்து