பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வாழ்வில் நடவாதது ★ 141



கலாசாலையில் நடன வகுப்பு நேரங்களில் மட்டும் பழகிய அவர்கள், தனித்துப் பழகவும், நெருக்கம் உண்டாக்கியது ஒரு சந்தர்ப்பம்.

இந்திய சர்வ கலாசாலைகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூது கோஷ்டி ஒன்றைத் தமது வித்தியா பவனத்தைப் பார்வையிடுவதற்காக அழைத்து வந்திருந்தார் நந்தகுமார். அவருடைய வேண்டுகோளின்படியே கலாசாலை ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் தூது கோஷ்டியினர் கண்டு மகிழ்வதற்காகச் சில நாடக, நாட்டிய, இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தில்லைநாதன் தன்னுடைய நடன வகுப்பின் சார்பாக உத்தரராம சரிதத்தில் சில நிகழ்ச்சிகளை நாட்டிய வடிவில் சித்திரித்துக் காட்ட எண்ணியிருந்தான். நடன வகுப்பில் பத்துப் பன்னிரண்டு இளைஞர்களும் படித்து வந்தனர். அவர்களிலே ஒருவனை ராமனாவும், பெண்களில் வாணியைச் சீதையாகவும் நடிக்கச் செய்து ஒத்திகை பழக்கி வந்தான் அவன்.

கடைசி ‘ரிஹர்சல்’ அன்று நந்தகுமார் நேரில் வந்து பார்வையிட்டார். சீதையாக நடித்த வாணியின் நடிப்பு அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ராமனாக நடித்த மாணவனின் நடிப்பு அவ்வளவாக அவருக்குப் பிடிக்கவில்லை. “தில்லைநாதன்! தயவுசெய்து ஒரு சிறு மாற்றம் செய்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் நடிப்பும், நடனமும் அற்புதமாக இருக்கின்றன. ஆனால், இந்த மாணவனின் நடிப்பு சோபிக்கவில்லை. அதனால் இந்த மாணவனுக்குப் பதிலாக நீங்களே இந்தப் பெண்ணோடு ராமனாக நடித்துவிடுங்கள். இனிமேல் வேறு மாணவர்களைத் தயார் செய்யவும் நாள் கிடையாது. நீங்களே நடிப்பதானால் பயிற்சி உங்களுக்குத் தேவையில்லை” என்றார்.

மாணவர் யாரேனும் நடிப்பதையே தில்லை விரும்பினான். ஆனால் அதிபரின் யோசனையை எதிர்க்கத் தயங்கியதால், அதை ஏற்றுக் கொண்டான்.

சர்வகலாசாலைத் தூது கோஷ்டியினர் முன்னால் தில்லைநாதனும், வாணியும் நடித்துக் காட்டிய உத்தரராம சரிதக் காட்சிகள் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல அமைந்துவிட்டன.ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொல்வது, தீக்குளிக்கும்போது பூமி பிளந்து, சீதையைத் தன் மடியில் தாங்கிக் கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளைத் தில்லைநாதனும் வாணியும் நடித்துக் காட்டியபோது பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. அரங்கத்தில் யாரோ ஒரு ஆணும் பெண்ணும் நடிக்கிறார்கள் என்பதை மறந்து, பவபூதியின் காவியம் கண்முன் தத்ரூபமாக நிகழ்வது போன்ற உணர்வை அடைந்துவிட்டனர், ரசிகர்கள். இந்தச் சம்பவத்திலிருந்துதான் தில்லைநாதன் வாணி இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். அன்பு, உணர்ச்சியின் எல்லைக்கு வந்து பழக்கமாக மாறியிருக்கும் நிலையில் இருந்தன அவனும் அவளும் .

"ஏன்? இன்றைக்கு இவ்வளவு மெளனம்?” - ஒடைத் தண்ணீரைக் காலால் அளைந்து கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்த தில்லைநாதனைப் பார்த்துக் கேட்டாள் வாணி.