பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“ஒன்றுமில்லை. ஏதோ யோசனை.”

"அந்த யோசனை எனக்குத் தெரியக்கூடாததோ...?”

"அப்படி ஒன்றுமில்லை. அது இருக்கட்டும்! நளினியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“எந்த நளினியைச் சொல்கிறீர்கள்?”

“எத்தனை நளினிகள் இருக்கிறார்கள் இங்கே? ஒன்றும் தெரியாதவள் போலக் கேட்கிறாயே? அவள்தான்... உன்னோடு வகுப்பில் நடனம் கற்கிறாளே..? கலாசாலை அதிபரின் மகள் நளினி...?”

“அந்த நளினியைப் பற்றி நினைப்பதற்கு இப்போது அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது?”

“இல்லை? அவளுடைய போக்கு எனக்கு ஒரு மாதிரிப் படுகிறது!... நமக்கெல்லாம் படியளக்கும் வள்ளல் நந்தகுமாரின் புதல்வியாயிற்றே என்று பார்க்கிறேன்.”

“என்ன விஷயம்.?”

"உன்னிடம் சொன்னால் நீ வேறு விதமாக நினைத்துக் கொண்டு என் மேலேயே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவாய். அப்பப்பா! இந்தப் பெண்கள் இருக்கிறார்களே..?” - ஒரக்கண்ணால் வாணியைப் பார்த்துக் கொண்டே கூறினான் தில்லைநாதன்.

“சொல்லாவிட்டால் அதைவிடப் பெரிய சந்தேகம் ஏற்படும். சொல்லியே விடுங்களேன்.”

"வாணி! இந்த உலகத்தில் பிறக்கும்போதே நான் செய்த மாபெருங் குற்றம் அழகான நிறத்தோடும் அழகான உடலோடும் பிறந்ததுதான். நான் யாரை விரும்பவில்லையோ அவர்கள் என்னையும் என் அழகையும் விரும்பினால் அதைவிட எனக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்?”

"சொல்வதைக் கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்.”

"இந்த விஷயத்தை நீ புரிந்து கொள்வதைவிடப்புரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆனாலும் சொல்கிறேன். இன்றைக்குக் கலாசாலை முடிந்ததும் நீங்களெல்லாம் போய்விட்டீர்கள் அல்லவா? நான் என் அறைக்குப் போய் நாட்டிய உடைகளையும், கால் சலங்கைக் கொத்துக்களையும் கழற்றி வைத்துக் கொண்டிருந்தேன். நளினி சுற்றும் முற்றும் மிரள மிரளப் பார்த்துக் கொண்டே என் அறைக்குள் நுழைந்தாள்.

“ஏதேதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டு நின்றாள்.பின்பு சிறிது நேரம் கழித்துப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான் அவளுடைய தனியான வருகையின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. என் மேஜைமேல் இந்தக் கடிதத்தை வைத்துவிட்டுப்போயிருக்கிறாள்! இதைப் படித்துவிட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை எனக்கு இந்தா! நீயும் வேண்டுமானால் படித்துப் பார். ஆனால் என் மேல் சந்தேகப்படாதே."