பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“உங்கள் வேண்டுகோள் இவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஏற்கனவே வேறொரு பெண்ணுக்கு என்னையும் என் இதயத்தையும் திருப்பிப் பெற முடியாத வகையில் கொடுத்துவிட்டேனே?”

"வாணி உன் இதயத்திலும் நீ அவள் இதயத்திலும் இடம்பெற்று ஒன்றிவிட்டதை நான்அறிவேன் தில்லை! ஆனால் எனக்காக நீ அவளைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்! எனக்குப் பின் என் மகளின் கணவனாக வாய்க்கிறவன் எவனோ அவன்தான் என் இலட்சியங்களையும் கலாசாலையையும் கொண்டுசெலுத்தமுடியும்! அந்த மகத்தான பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கக் கனவு கண்டேன்.”

“தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். அந்த உயரிய இலட்சியங்களை நிறைவேற்றும் பாக்கியம் இந்த ஏழைக்கு வேண்டாம்!”- தில்லைநாதன் அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். நந்தகுமாருக்குக் கோபம் வந்துவிட்டது.

“நீவிரும்பும் அந்த வாணியே உன்னிடம் வந்து ‘நான் உங்களைக் காதலிக்கவில்லை, என்னை மறந்துவிடுங்கள்’ என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?”

"வாணியை அங்கம் அங்கமாகச் சித்ரவதை செய்தாலும் அவள் இப்படிச் சொல்லவே மாட்டாள். சொன்னால் அப்புறம் நீங்கள் சொல்கிறபடி செய்யத் தில்லைநாதன் தயாராயிருக்கிறான்!” பந்தயம் இடுவது போலப் பேசினான் அவன்.

அவ்வளவுதான்! அன்றிரவே புறப்பட்டுப் போய் மறுநாள் காலை வானியைச் சென்னைக்குக் கூட்டிக் கொண்ட வந்துவிட்டார் நந்தகுமார். என்ன சொல்லி அவள் மனத்தை மாற்றினாரோ தெரியவில்லை! வாணி சென்னைக்கு வந்தாள்.நளினியையும் நந்தகுமாரையும் அருகில் வைத்துக்கொண்டே, “என்னை மறந்துவிடுங்கள்! உங்களை நான் காதலிக்கவில்லை. தப்பித்தவறி எப்போதாவது காதலிப்பதுபோல நடந்து கொண்டிருந்தேனானாலும் அது பொய்!” என்று குமுறி வரும் அழுகைக்கு இடையே தில்லையிடம் கூறி விட்டு, அங்கே தாமதிக்காமல் உடனே புறப்பட்டுப் போய்விட்டாள்.

இடிவிழுந்து எரிகின்ற பச்சைமரம் போல உடைந்து போய்ப் பற்றி எரிந்தது தில்லைநாதனின் இதயம். ‘வாணி இப்படி மோசம் பண்ணுவாள்’ என்று அவன் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராதது - நடவாதது - வேகமாக நடந்தேவிட்டது. கப்பல் உடைந்து கடலில் விழுந்தவன் எது கிடைத்தாலும் அதை ஆதாரமாகப் பற்றிக் கொள்வதுபோலத் தில்லைநாதன் தன்னையும் தன் உள்ளத்து ஆசைகளையும் உயிரோடு அவருக்கு மலிவான விலையில் நன்றி என்ற பேரில் அர்ப்பணம் செய்துவிட்டான்.

ஞாயிற்றுக்கிழமையன்று வடபழநியில் நளினிக்கும், தில்லைநாதனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்லும் கலாசாரத் தூது கோஷ்டியுடன் புதுமணத் தம்பதிகளாகவே இருவரையும் விமானம் ஏற்றி அனுப்பினார். எல்லாத் திட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திவிட்ட பெருமையோடு ஊர் திரும்பினார்.