பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வாழ்வில் நடவாதது ★ 147



அமெரிக்காவில் சுற்றுப்பிரயாணத்தின்போது ஆங்காங்கே நளினியும், தில்லைநாதனும் ஆடிக் காட்டிய நடனங்கள் மிகச் சிறப்பாக அமைந்தன. அந்நாட்டுப் பத்திரிகைகளும் பிரமுகர்களும் அதைப் பெரிதும் புகழ்ந்தனர். அதையொட்டி இந்தியாவிலும் அவர்கள் புகழ் பரவியது. புதிய சூழ்நிலைகளும் கியாதியும் (மேன்மையும்) தில்லைநாதனுடைய மனத்தில் கவலையை மாற்றிவிட்டன.

அவர்களுக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட புகழையும் வரவேற்பையும் பத்திரிகைகளில் படித்துப் படித்துப் பெருமிதம் அடைந்தார் நந்தகுமார். அவர் படித்ததுபோலவே அந்த அபாக்கியவதி வாணியும்தான் அவற்றையெல்லாம் படித்துப் பெருமிதப்பட முயன்றாள். ஏக்கம்தான் குமுறியது. ‘எல்லாம் தான் ஒருத்தி செய்த தியாகத்தால் வந்த பெருமை’ - என்பது அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அதைப் பெருமையாக அவளால் உணர முடியவில்லை. ஏங்கி ஏங்கி உடல் இளைத்துக் களையிழந்து கொண்டிருந்தாள் அவள். தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தனக்காக இழக்க முடியாததை இழக்க முன் வந்த அந்தப் பெண் தெய்வம் ஏக்கம் தாளாமல் தற்கொலை முயற்சியில் இறங்கிவிடக்கூடாதே என்பதற்காகக் கலாசாலைக் கட்டடத்திற்குள்ளிருந்து வெளியேற விடாது அவளுக்கு வசதிகள் செய்து காத்து வந்தார் நந்தகுமார். ஆனால் பாவம்! அவள் இதயம் என்றோ செத்துவிட்டது என்பது அவருக்கு எப்படித் தெரியும்?

விதி, மனிதர்களுக்குப் புரியாதது மட்டுமல்ல! மனிதர்களைவிட பயங்கரமானதும்கூட! நியூயார்க்கில் தங்கியிருந்தபோது, ஒருநாள் ஜூரம் என்று சுருண்டு படுத்தாள் நளினி. தில்லைநாதன் பதறிப் போனான். பெரிய டாக்டர்கள் வந்து மருந்து கொடுத்தனர். நோயாயிருந்தால் அல்லவா மருந்துக்கு அழியும்? அதுதான் விதியின் பயங்கரமான அவஸ்தை யாயிற்றே? மூன்று நாள் ஜுரத்தோடு போராடிவிட்டு, அவனையும் உலகத்தையும் விட்டு, அவனும் உலகமும் பின்தொடர முடியாத இடத்துக்குப் போய்ச்சேர்ந்துவிட்டாள் நளினி.

தில்லைநாதன் கதறினான். தூது கோஷ்டியினர் வந்து ஒன்றரை மாதம்கூட ஆகவில்லை. மன ஆறுதலைப் பெற வேண்டும் என்பதற்காகத் தில்லைநாதனுக்கு மட்டும் ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து இந்தியாவுக்கு உடனே திருப்பி அனுப்பியது அமெரிக்க அரசாங்கம்.

நந்தகுமாருக்கு இந்தச் செய்தி தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை விமானநிலையத்தில் கண்ணீர் வெள்ளத்திடையே தில்லைநாதனை எதிர் பார்த்து, நொந்துபோய் நின்று கொண்டிருந்தார். விமானம் வந்தது; அவன் இறங்கி வந்து அவரைக் கட்டிக் கொண்டு ‘கோ’ வென்று கதறியழுதான்.

“தில்லை! விதி எனக்குச் சரியான பாடத்தைக் கற்பித்துவிட்டதப்பா... நான் ஒர் அனாதைப் பெண்ணிடமிருந்து உன்னைத் தட்டிப் பறித்து என் பெண்ணிடம் கொடுத்தேன்.ஆண்டவன் என் பெண்ணையே தட்டிப்பறித்துக்கொண்டான்!' அவர் ஏதேதோ அலறினார். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறமுடியாத நிலையில் வித்தியாபவனத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.