பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி / கற்பனையேயானாலும்... * 157

போய்விடுவோம்” என்றார் நண்பர். அவர் குரல் இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை.

“ஆமாம், ஆமாம்! வந்தவுடனே நல்ல இயற்கைக் காட்சியைக் கண்டு விட்டோம். பத்மநாபசாமி புண்ணியத்தில் செளக்கியமாக ஊர் போய்ச் சேர வேண்டும். எட்டி நடையைப் போடுங்கள்” என்று நானும் ஒத்துப் பாடினேன்.

குன்றிலிருந்து இறங்கியதும் நெஞ்சு ‘படக் படக்’ என்று அடித்துக் கொண்டது. மேலிருந்து வேகமாகக் கீழே இறங்கிய இளைப்பும் பயத்தின் வேகமும் ஒன்று சேர்ந்து கொண்டதனால் மூச்சு இரைத்தது. சுற்றும் எங்களைப் பார்க்கவோ கண்காணிக்கவோ எவரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னே மூச்சும் நெஞ்சுத்துடிப்பும் சராசரி நிலைக்கு வந்தன. ஈ காக்கைகூடத் தென்படாத ஜனசஞ்சாரம் அற்ற அந்த அழகிய கடற்கரையிலிருந்து குறுகலான பாதையில் வேகமாகத் திரும்பி நடக்கலானோம். போகும்போது பரஸ்பரம் இருவருக்கும் இருந்த பயத்தினால் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடத் தோன்றவில்லை. ஏறக்குறையப் பத்து நிமிஷத்தில் ஒரு மைல் தூரத்தையும் கடந்து ரோட்டுக்கு வந்துவிட்டோம் என்றால் எவ்வளவு வேகமாக நடந்திருப்போம் என்பதை நேயர்களே தெரிந்து கொள்ள முடியும்.

“என்ன சார், அதற்குள்ளே திரும்பிவிட்டீர்கள்? பார்த்தாச்சா? இரண்டு மணி நேரம் ஆகுமென்று சொல்லிவிட்டுப் போனீர்களே!” என்று கேட்டான் டிரைவர்.

“அங்கே ஒன்றும் பிரமாதமாக இல்லை, பார்ப்பதற்கு போனோம்! உடனே திரும்பி விட்டோம்” என்று பச்சைப் பொய்யைப் பூசி மெழுகினேன். அதற்கு மேல் அவனும் கேட்கவில்லை. டாக்ஸி புறப்பட்டது. நண்பரும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டோம். திருவனந்தபுரத்தில் சாலை பஜாரில் ஒரு ஹோட்டலின் மாடி அறையில் நாங்கள் தங்கியிருந்ததால்தான் அங்கு வந்து இறங்கினோம். வாடகைக்காக டிரைவர் என் முன் வந்தபோதுதான் கையோடு கொண்டு போயிருந்த ‘தோல் பை’ எங்கோ தவறிவிட்டதை உணர்ந்தேன். பணம் அதில்தான் இருந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனாலும் என் திகைப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “நீங்கள் கொடுங்கள், சார்!” என்று நண்பரை வேண்டிக் கொண்டேன். நண்பர் வாடகையைக் கொடுத்து அனுப்பினார். டிரைவரிடம் நான் மறைத்தாலும் என்னிடம் உண்டான கலவரத்தை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையானால் போகும்போது அவன் என்பக்கம் திரும்பி ஒரு தினுசாகப் பரிதாபம் தோன்றப் பார்த்துவிட்டுப் போக வேண்டிய அவசியம் என்ன?

“சார், ஒரு பெரிய முட்டாள்தனம் பண்ணிவிட்டேன். என் தோல் பை அந்த இடத்தில் விழுந்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம்?” என்று அறைக்குள் நுழைந்ததும் மெல்லிய, பயம் நிறைந்த குரலில் நண்பரைக் கேட்டேன்.

“எந்த இடத்தில்? நினைவு இருக்கிறதா?”

“அதுதான் ஐயா! அந்தக் குன்றில், தென்னைமரத்தடியில்.”