பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156*நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“அடபாவி மனுஷா அங்கேயா போட்டீர்?”

“நான் என்ன செய்வேன்! பதற்றத்தில் விழுந்ததே தெரியவில்லை. டிரைவர் இங்கே வந்து வாடகைக்கு நின்றபோதுதான் எனக்கே நினைவு வந்தது.”

“எந்தப் பை? ‘ஸிப்’ வைத்துச் சதுரமாக வைத்துக் கொண்டிருந்தீரே; அந்தப் பையா?”

“அதுவேதான் ஐயா! கொஞ்சம் பணம், முக்கியமான காகிதங்கள் எல்லாம் உள்ளே கிடக்கின்றன.”

“ஐயையோ இப்போது என்ன செய்யப் போகிறீர்?”

“அதுதான் எனக்கே தெரியவில்லை என்ன செய்வது?”

“ஒன்றும் செய்ய வேண்டாம். போனால் போகிறது. தலை முழுகிவிடும். திரும்ப அங்கே போவது நல்லதல்ல.”

“உண்மைதான்! போவதில் பயன் இல்லை. சனி, தொலையட்டும்!”

“அதுதான் சரி. நீர் பையைத் தேடிக் கொண்டு போவீர். ஒருவேளை அங்கே போலீசும் விசாரணையுமாக இதற்குள் ஒரே களேபரம் ஆகியிருக்கும். ‘நீர் எப்போது வந்தீர்? எதற்காக வந்தீர்? ஏன் பை விழுந்தது?’ என்று உம்மை விசாரிக்காமல் பையைத் தரமாட்டார்கள். நீர் முழி முழி என்று முழிப்பீர் மாட்டிக்கொள்ள நேரிடும். ஆகவே போகாமல் இருப்பதே நல்லது” என்றார் நண்பர். எனக்கும் அதுதான் சரி என்று பட்டது.

இரண்டு மணி நேரமாகிவிட்டது. ஸ்நானம், சாப்பாடு எல்லாம் ஹோட்டலிலேயே முடிந்தன. அறைக்குள் உட்கார்ந்து நிம்மதியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். காலையில் நடந்த சம்பவத்தைப் பற்றிய பயமோ நடுக்கமோ துப்புரவாக இப்போது இல்லை. நேர்மாறாக அதே சம்பவத்தைப் பற்றிக் கதாசிரியர்கள் என்ற முறையில் ஓரளவு வேடிக்கையாகவே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். “என்ன என்.பி.சார் இந்தச் சம்பவத்தை ஓர் அருமையான சிறுகதையாகக் கற்பனை செய்தால் நன்றாக இருக்காது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று நண்பர் கேட்டார்.

“ஓ! பேஷாகச் செய்யலாம். காதல் கதை ஒன்றை ‘டிராஜடி’யில் (சோக முடிவு) முடித்துக் காட்டலாம்.”

“அது மட்டுமா? லைலா ― மஜ்னு, அம்பிகாபதி ― அமராவதி, ரோமியோ ― ஜூலியட் இந்த மாதிரி படிக்கிறவனைக் கண்ணீர் சிந்த வைக்கலாம், ஐயா!”

“வெளுத்து வாங்கும். நீரே எழுதிவிடுவீர்போல் இருக்கிறதே!”

“ஏன்? நீங்கள் எழுதுவதாக இருந்தால் நான் எழுதவில்லை.”

“சே சே! நீர்தாம் முதலில் பார்த்தீர். அதனால் உமக்குத்தான் முதல் உரிமை, நீரே எழுதும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.