பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி / கற்பனையேயானாலும்... ★ 163


“ஐயோ! நான் ஒரு பாவமும் அறியேன், சார்! இந்தக் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களும் சம்பாஷணைகளும் முற்றும் கற்பனை, சார்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு, என்னை நம்புங்கள். நான் நிரபராதி சார்!” என்று பிரலாபிக்கத் தொடங்கினார் என் நண்பர்.

“நிறுத்துங்கள் பேச்சை குருடன் கூட நம்பமாட்டான்.கற்பனை எப்படி இவ்வளவு கச்சிதமாக அமைந்தது? அட, சம்பாஷணைகள்தாம் அப்படி அமைந்தாலும் ‘அம்மு, பாஸ்கரன்’ என்ற பெயர்கள் கூடவா ஒன்றாக அமையும்?”

“சார், ஏதோ என் மனத்தில் தோன்றிய பெயரைப் போட்டு எழுதினேன். கொலையுண்டவர்களின் பெயரும் இப்படியே இருக்குமென்று எனக்குத் தெரியுமா?”

“சரி ஐயா, பெயர், சம்பாஷணைகள் எல்லாமே உம்முடைய சொந்தக் கற்பனை என்றே வைத்துக் கொள்வோம்! கொலை செய்யப் பெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்வரை அவர்கள் ‘பார்பரியோவின் காதலை’ப் பற்றிப் பேசியிருக்கலாம் என்பது அங்கு விழுந்து கிடந்த புத்தகத்திலிருந்து அனுமானிக்கப்படுகிறது. அதைக்கூடவா நீராகக் கற்பனை செய்து எழுதினீர்?”

“ஏன் சார்? கற்பனை செய்திருக்கக்கூடாதென்பதற்கு மட்டும் என்ன நியாயம் இருக்கிறது?” என்று ஆத்திரத்தில் இன்ஸ்பெக்டரை எதிர்த்துக் கேட்டார் நண்பர். இன்ஸ்பெக்டரின் குதர்க்கம் நிறைந்த கேள்விகள் அவருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டிருந்தன.

“இந்த விதண்டா வாதமெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் போலீஸ் அதிகாரி. எனக்குக் கடமைதான் தெரியும்.”

“கடமைதானே தெரியும்? தெரிந்ததைச்செய்து கொள்ளுங்கள்!” நண்பரின் பேச்சு வரம்பு மீறிவிட்டது.

“உங்கள் இருவர் மேலும் வாரண்டு பிறப்பித்திருக்கிறேன். இருவரையும் இப்போதே அரெஸ்டு செய்கிறேன். வேறு சரியான புலன்கள் அகப்படுகிற வரையில் நீங்கள் ‘ரிமாண்டில்’ இருக்க வேண்டியதுதான்.”

நாங்கள் பதில் சொல்லவில்லை.

“புரொப்ரைட்டர்!”- மாடியே அதிரும்படி கூச்சல் போட்டார் இன்ஸ்பெக்டர். அடுத்த கணம் அந்த ஹோட்டலின் முதலாளி கை கட்டி வாய் பொத்திப் பவயமாகத் தெய்வத்திற்கு முன் நிற்கும் பக்தரைப்போல இன்ஸ்பெக்டருக்கு முன் ஓடி வந்து நின்றார்.

“இவர்களை ‘லாக்கப்’பிற்குக் கொண்டு போகிறேன். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பாகிறவரை இந்த அறையை வேறு எவருக்கும் வாடகைக்கு விடக்கூடாது. இப்படியே பூட்டிச் ‘சீல்’ வைத்துவிடுவோம். இது சர்க்கார் பொறுப்பில் இருக்கும்.”

“சரி சார், அப்படியே செய்யுங்கள்.” புரொப்ரைட்டர் சம்மதித்தார். ‘இந்தப் பாழாய்போன மனிதர்கள் நம் ஹோட்டலில் ஏன் தங்கினார்கள்? இவர்களால் எவ்வளவு தொல்லை!’ என்று மனத்திற்குள் எங்களை வசைபாடியிருப்பார் அவர்.