பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


விதியையும் போதாத வேளையையும் எண்ணிச் சபித்துக் கொண்டே இன்ஸ்பெக்டரோடு சென்றோம். “இந்த வருஷம் ஏன்தான் லட்சதீப உற்சவத்துக்கு வந்தோமோ?”

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சாந்தம் அடைந்திருந்தார்.“சார், எதற்கும் நீங்கள் இருவரும் நடந்தது நடந்தபடியே ― அதாவது நீங்கள் என்னிடம் சொல்லியதுபோல் ― ஆளுக்கு ஒரு ‘ஸ்டேட்மெண்ட்’ எழுதிக் கொடுத்துவிடுங்கள். பின்னால் ஆகிற படி ஆகிறது!” என்று சொல்லிக் கொண்டே காகிதத்தை எடுத்து ஆளுக்கு ஒன்றாக நீட்டினார். நாங்கள் அதை வாங்கி விரிவான ஸ்டேட்மெண்டு ஒன்று எழுதிக் கொடுத்தோம். அதை வாங்கிக் கொண்டதும் எங்களை ‘லாக்கப்’புக்கு அனுப்பினார். யாரை நோவது? யாரிடம் கோபித்துக் கொள்வது? குனிந்த தலைநிமிராமல் அரசாங்க ‘விருந்தாளி’களாக ‘விருந்தறை’க்குள் நுழைந்தோம். அந்த நாற்றம் நிறைந்த அறையையும் கிழிந்த ஓலைப்பாயையும் பார்த்தபோது குமட்டிக் குமட்டி வாந்தியெடுக்க வந்துவிடும் போலிருந்தது.

“என்ன, என்.பி.? ‘அந்தக் காலத்திலே தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குப் போகவில்லையே!’ என்ற குறை இப்படியா தீர வேண்டும்” ― நண்பர். ஏதோ ஹாஸ்யமாகப் பேசுவதுபோல் பேசினாலும் அந்தப் பேச்சின் முடிவில் துன்பத்தால் ஏற்படும் விரக்தியே நிறைந்தது.

“அட, அதுதான் போகிறது! நாசமாய்ப்போகிற கதையில் எப்படி ஐயா அவ்வளவு திருத்தமாக எழுதித் தொலைத்தீர்?” என்று நான் அவர் மேல் எரிந்து விழுந்தேன்.

“என்னைச் சொல்லாதீர். நீர் தோல் பையைப் போட்டுவிட்டு வராவிட்டால் இருக்கிற இடம் தேடி வந்து கதையைப் படிக்கவா போகிறான்?” என்று என் மேல் பதிலுக்கு எரிந்து விழுந்தார் அவர்.

இருவருமாகச் சேர்ந்து விதியின் மேல் எரிந்து விழுந்தோம். அந்த ஜெயில் அறையில் இருவருமாக மூன்று வாரம் கழித்துவிட்டோம். எங்கள் கதி என்ன ஆகுமென்று எங்களாலேயே சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. முகம் நிறையத் தாடியும் மீசையும் வளர்ந்துவிட்டன.ஜெயில் உணவும் ஒருவிதமாக நாலைந்து தடவை வாந்தியெடுத்தபின் இப்போது வழக்கமான உணவுபோல் ஒத்துக்கொண்டுவிட்டது.

“பரிபூரணமாக நிறைந்த அனுபவமுள்ளவன்தான் கதாசிரியனாக இருக்க வேண்டும் இல்லையா? அதனால்தான் இதுவரை ஏற்படாத இந்தச் சிறை அனுபவத்தைக் கற்பனாதேவி நமக்கு அளித்திருக்கிறாள்” என்று இருவருமாக மெல்ல ஆத்மதிருப்தி அடைந்து கொண்டிருந்தோம். சிறையில் பத்திரிகை கிடைத்தாலாவது அந்தக் கேஸ் நிலவரம், புலன் விசாரணை எல்லாம் எப்படி இருக்கின்றன என்று படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதுதானே கிடைக்கவில்லை.

இதோ அதோ என்று பின்னும் பதினைந்து நாட்கள் கழிந்துவிட்டன. மறுமாதம் முதல்தேதி காலை திடீரென்று இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும்