பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி / கற்பனையேயானாலும்... ★ 165

இரண்டு மூன்று முரட்டுக் கைதிகளுடன் எங்கள் அறைப் பக்கமாக வந்தனர். எங்கள் வார்டின் கதவு திறக்கப்பட்டது.

“சார், நீங்கள் இருவரும் வெளியே வாருங்கள். உங்களுக்கு விடுதலை. இவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகள்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் இன்ஸ்பெக்டர். ‘அப்பாடா? பிழைத்தோம்’ என்று நானும் நண்பரும் வெளியேறினோம். அவர் எங்களிடம் மிகவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“ஆமாம் சார், அது எப்படி அந்த மாதிரி அச்சில் வார்த்தாற்போல் உங்களால் கற்பனை செய்ய முடிந்தது? நீங்கள் உங்கள் கதையை எப்படி முடித்திருக்கிறீர்களோ அப்படியேதான் உண்மையிலும் நடந்திருக்கிறது. அம்முவும் பாஸ்கரனும் பேசிக் கொண்டிருந்தபோது இருட்டிவிட்டதென்று எழுதியிருந்தீர்கள் அல்லவா? அப்போது இந்தத் திருட்டுப் பயல்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் இருந்த நகைநட்டுக்களைப் பறித்துக் கொண்டு தாமாகவே தற்கொலை செய்து கொண்டதுபோல் தோன்றும்படி அவர்களை அடித்துத் தென்னை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த ஒரு மாதமாக அலைந்து இதைக் கண்டுபிடித்தேன். நேற்று ஒரு நகைக் கடையில் திருட்டு நகைகளை விற்க வந்தபோது இவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள்” என்று எங்களுடைய பழைய ஸ்தானத்தில் இப்போது இருந்தவர்களைக் காட்டினார் இன்ஸ்பெக்டர். திரும்பத் திரும்ப அவர் நண்பரின் கதையைப் பற்றி ஆச்சரியப்பட்டார்.

“காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல்தான் இன்ஸ்பெக்டர் சார். இந்த மாதிரி கற்பனைதான் ஓர் எழுத்தாளனின் மனச்சக்தி. அவன் தன் பேனாவில் உருவாக்கும் கற்பனை எங்காவது என்றாவது நடந்திருக்கிறது; அல்லது நடக்கிறது; இரண்டும் இல்லாவிட்டால் நடக்க இருக்கிறது ― தெரிந்து கொள்ளுங்கள்” என்று பெருமிதத்தோடு இன்ஸ்பெக்டருக்குப் பதில் சொன்னார் என் நண்பர்.

“என்னவோ போங்கள். உங்கள் இருவரையும் மகத்தான கஷ்டத்தை அனுபவிக்கும்படி செய்துவிட்டேன்!”

“நீங்களா செய்தீர்கள்? சந்தர்ப்பம் அப்படிச் செய்துவிட்டது” நான் உபசாரமாக இப்படிக் கூறினேன்.

“அடுத்த வருஷம் லட்சதீப உற்சவத்திற்கு வந்தால் நீங்கள் அவசியம் என் விருந்தாளியாகத் தங்க வேண்டும்.”

“ஐயையோ மறுபடியுமா?”

“பார்த்தீர்களா? பார்த்தீர்களா? இந்தக் குயுக்திதானே வேண்டாம் என்கிறது? நான் என் வீட்டில் விருந்தினராகத் தங்க வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தப்பர்த்தம் செய்து கொள்கிறீர்களே.”

“அதற்கென்ன சார், நாங்கள் அடுத்த வருஷம் வந்தால் தங்குகிறோம்.”