பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. நாணயம்

க்கீல் ஒரு கட்டுப் பைல்களைத் தூக்கி அவன் கையில் திணித்தார். குமாஸ்தா நாராயணன் அவ்வளவையும் வாங்கிக் கொண்டான்.

“ஏன் நிற்கிறீர்? அவ்வளவுதான், நீங்கள் போகலாம். காலையில் வரும் போது எல்லாக் கேஸ்களின் பைலையும் படித்துச் சுருக்கமாகக் குறிப்பு எழுதிக் கொண்டு வாரும். மறந்து விடாதீர்...” வக்கீல் அவனைத் துரத்தாத குறையாக விரட்டினார்.

“சார்!... வந்து வந்து...”

“என்ன ஐயா? ஏன் குழைகிறீர்? ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், சட்டென்று சொல்லித் தொலையுங்கள்.”

“வீட்டிலே கொஞ்சம் பணமுடை. சம்பளத்திலே முன் பணமாகப் பதினைந்து ரூபாய் கொடுத்தால் நன்றாயிருக்கும்.”

“இதோ பாருங்கள். இன்றைக்குத் தேதி இருபத்தெட்டு, இன்னும் இரண்டு நாட்களில் சம்பளமே உம் கைக்கு வரப் போகிறது. அதற்குள் என்னை எதற்குத் தொந்தரவு செய்கிறீர்? போம் ஐயா, போய் விட்டுக் காலையில் வாரும். இருந்ததைப் பாங்குக்கு அனுப்பி விட்டேன். கைவசம் ‘சில்லறை’யாக இல்லை.”

“அது இல்லை சார்! மிகவும் நெருக்கடியான நிலை”

“ரொம்ப சாரி! இதற்கு மேல் நான் பதில் சொல்ல முடியாது. இப்போது தர மாட்டேன்” வக்கீலுக்குக் கோபம் வந்து விட்டது.இனி மேல் அவரிடம் கெஞ்சினால், வாயில் வந்தபடி பேசுவதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டாரென்று அவனுக்குத் தெரியும். கிழிந்து போயிருந்த கோட்டுப் பையைத் தடவிக் கொண்டே ஏமாற்றத்தோடும், பைல்களோடும் அங்கிருந்து வெளியேறினான் நாராயணன். மாதம் நாற்பத்தைந்து ரூபாய் சம்பாதிக்கும் ஒரு வக்கீல் குமாஸ்தாவின் வாழ்க்கையை இருபது தேதிக்கு மேல் பஞ்சப் பிரதேசமாகப் பிரகடனம் செய்ய வேண்டியதுதான், வேறு வழியில்லை.

மனைவி, நாலைந்து குழந்தைகள், பள்ளிக்கூடம், வீட்டு வாடகை, சமயங்களில் ஆஸ்பத்திரி, இவ்வளவையும் சமாளிக்கிற சக்தி நாராயணனின் நாற்பத்தைந்து ரூபாய்க்குக் கிடையாது.

மேலே உரசி விடுவதுபோல் ஒரு டாக்ஸி அசுர வேகத்தில் வந்தது. நாராயணன் ஒதுங்கிக் கொண்டான்.