பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி /நாணயம் ★ 171


குழந்தை சுசி பின்புறமாக வந்து நாற்காலியைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

“அப்பா திருடினால் பாவம்தானே” - அவன் நெஞ்சில் சவுக்கடி விழுந்த மாதிரி இருந்தது.

“ஏன் கண்ணு! யார் சொன்னா அப்படி உனக்கு!”

“இன்றைக்குப் பள்ளிக்கூடத்திலே பக்கத்துப் பையன் என் பென்சிலை எடுத்துக் கொண்டுவிட்டான் அப்பா!”

“ஊம்! அப்புறம்…?”

“வாத்தியாரிடம் போய்ச் சொன்னேன்! அவர் அவனைக் கூப்பிட்டுப் பிரம்பாலே அடிச்சார் அப்பா!”

“………”

“ஏம்ப்பா! ஒண்ணு கேக்கறேன், பதில் சொல்லுவியோ?”

“என்ன, கேளேன்?”

“திருடறதுன்னா என்னப்பா?”

“திருடறதுன்னா இன்னொருத்தர் பொருளை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்கிறதுதான், அம்மா!”

“அப்படிச் செய்தால் சுவாமி கண்ணை அவிச்சிடுமா?”

“………”

“திருடினா சுவாமி அவிச்சிடும்னு வாத்தியார் சொன்னாரே, அப்பா!”

“சுசி! நீ சமர்த்துக் குழந்தை இல்லையா? போ… நாழியாகிறது. போய்த் தூங்கு. எனக்கு இதெல்லாம் பார்த்து எழுதணும்!”

“அப்பா அன்றைக்கு ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் வந்தானே, அவன் பொய் சொன்னானா அப்பா?”

“ஏன்?”

“இல்லேப்பா! அதனாலேதான் அவனுக்குக் கண் போச்சு!”

“சுசி! உனக்கு உதை கேட்கிறதா? நீ போய்த் தூங்கமாட்டே?”

“இதோ போய்விட்டேன், அப்பா!”

குழந்தை படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். வெளியே மழை வேறு அப்போதுதான் ஆரம்பித்திருந்தது.

‘முழுசாக ஆறு பச்சை நோட்டுக்கள். எல்லாக் கடனையும் அடைத்துவிடலாம். தெய்வமே அவன் கஷ்டத்தைச் சகிக்காமல் வக்கீல் கை தவறி வைக்கும்படி செய்திருக்கிறது. இல்லையானால் மகா கருமியான அந்த வக்கீல் அன்று மட்டும் கைதவறுவானேன்?’