பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி /நாணயம் ★ 173


“யாரையா இது? நடு ராத்திரியில் வந்து உயிரை வாங்குகிறது? தூங்கவிடமாட்டீர்களா?” என்று வக்கீல் கதவைத் திறந்தார்.

“நான்தான் குமாஸ்தா நாராயணன், சார்” என்று இழுத்தான்.

“என்ன ஐயா தலை போகிற காரியம்? இந்த அர்த்த ராத்திரியில்?”

“நீங்கள் கொடுத்த ஃபைல் கட்டில் இந்த அறுநூறு ரூபாய் இருந்தது. கைதவறி அதில் வைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது. அதை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்.”

வக்கீல் நனைந்து போயிருந்த நோட்டுகளை கையில் வாங்கிக் கொண்டார். நன்றி கூடச் சொல்லவில்லை. வந்தவன் சொட்டச் சொட்ட நனைந்து போயிருப்பதையும் கவனிக்கவில்லை.

“என்ன ஓய், சுத்த அசட்டு மனிதராக இருக்கிறீரே! காலையில் கொண்டு வந்து கொடுத்தால் குடி முழுகியா போய்விடும்! தூக்கத்தைக் கெடுத்துவிட்டீரே!” என்று அலுத்துக் கொண்டே கதவைச் சாத்தினார் அவனுடைய எஜமானர்.

‘என் மாதிரி அசடர்களுக்காகத்தான் இந்த உலகத்தில் மழை பெய்கிறது; வெய்யில் அடிக்கிறது; பயிர் விளைகிறது; காற்று வீசுகிறது’ என்று நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டே நடந்தான் அந்தக் குமஸ்தா.

இந்த வறட்டுக் கர்வத்தைத் தவிர அவனுக்கு வேறென்ன மிச்சமிருக்கப் போகிறது? அங்கே அந்தக் கர்வக்காரனின் வீடு மழைக்கு ஒழுகித் தெப்பமாகிக் கொண்டிருந்தது. நாணயத்தைக் காப்பாற்றிவிட்ட பெருமையில் சத்தியத்தின் பிரதிநிதியாய் இறுமாந்து நடந்து கொண்டிருந்தான் அவன்!

(கல்கி, 8.9.1957)