பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. நாமொன்று நினைக்க...!
(உள்ளொன்று வைத்து)

“சார்! உங்களை இன்று டிஸ்சார்ஜ் செய்து விட்டோம். நீங்கள் போகலாம். அழைத்துக் கொண்டு போக யாரும் வரவில்லை போலிருக்கிறதே?”

அன்று காலையில் முதன் முதலாக வார்டினுள் நுழைந்ததும் இராமநாதனிடம் வந்து டாக்டர் இப்படிக் கூறினார். டாக்டருக்கு மரியாதை செய்கிற பாவனையில் எழுந்து நின்ற இராமநாதன், “பரவாயில்லை சார்! பஸ் ஸ்டாப் ஆஸ்பத்திரி வாசலில்தானே இருக்கிறது. நானாகவே பஸ் ஏறி வீட்டுக்குப் போய் விடுவேன்.” என்று அவருக்குப் பதில் கூறினான்.

“சரி! அப்படியே செய்யுங்கள். வீட்டுக்குப் போன பின்பும், நான்கு நாள் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் ஒய்வாகவே இருங்கள்.” என்று கூறி விட்டு டாக்டர் போய் விட்டார்.

குடலில் ‘அல்ஸர்’ (ஒரு வகைப் புண்) ஏற்பட்டு ஒரு மாத காலம் ஆஸ்பத்திரி வார்டில் நோயாளியாகப் படுத்துக் கிடந்த இராமநாதன் அன்றுதான் சூரிய வெளிச்சத்தைக் கண்ணால் பார்க்கப் போகிறான். ஆஸ்பத்திரி வார்டிலிருந்து வெளியேறி ஒளியும், ஆரவாரமும் நிறைந்த வெளியுலகத்து மண்ணை மிதிக்கப் போகிறான்.

“என்ன சார் வீட்டுக்குக் கிளம்பியாயிற்றா” வார்டின் நர்ஸ் இனிய குரலில் புன்முறுவலோடு அவனை விசாரித்தாள்.

“ஆமாம் நர்ஸ்! போய் வரட்டுமா? மறந்துவிடாதீர்கள்.” சம்பிரதாயமாக அவளிடம் விடைபெற்றுக் கொண்டான் அவன்.

“உங்கள் மனைவி வரவில்லையா, அழைத்துக் கொண்டு போவதற்கு”

“அவளால் எங்கே வர முடியப்போகிறது நர்ஸ்? நானாகத்தான் பஸ் ஏறிப் போக வேண்டும்”

- உடனிருந்த மற்ற நோயாளிகளிடமும் விடை பெற்றுக் கொண்டு இராமநாதன் அங்கிருந்து வெளியேறினான். ஆஸ்பத்திரி வாயிலை ஒட்டினாற் போன்றிருந்த பஸ் நிறுத்தத்தில் வந்து நின்று கொண்டான். பஸ்ஸிற்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை நேரம். நகரத்திற்கே பொதுவான பெரிய சர்க்கார் ஆஸ்பத்திரி வாசல். நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்களும், போகிறவர்களுமாகக் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்?