பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / நாமொன்று நினைக்க...! 183


நோயால் பலவீனமுற்றிருந்த இராமநாதனின் உடல் காலை வெயிலைத் தாங்கிக் கொண்டு நிற்கமுடியாமல் சிறிது தள்ளாடியது. கார்களின் ஹரான் ஓசை, ரிக்‌ஷாக்களின் குரல், தெரு நடமாட்டம், எல்லாவற்றையும் ஒரு மாதத்துக்குப் பின் மீண்டும் கேட்டபோது, திடீரென்று கலகலப்பு நிறைந்து வேகமாக இயங்கும் புதிய உலகம் ஒன்றிற்கு வந்துவிட்டாற்போல் தோன்றியது.

“என்ன சார் உடம்புக்குத் தேவலையா?” குரலைக் கேட்டு இராமநாதன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய ஆபீஸ் ஹெட்கிளார்க் ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். கேட்டவருக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?

“தேவலை சார்! இன்றைக்குத்தான் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி, வீட்டுக்குப் போகிறேன்.”

“நல்லது! உங்களை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வேண்டுமென்று எண்ணம். ஒருநாள்கூட வரமுடியவில்லை.தற்செயலாக இன்றைக்கு வேறொரு காரியமாக இங்கே வந்தேன். உங்களையும் சந்தித்துவிட்டேன். வரட்டுமா?”

“சரி. போய் வாருங்கள்…” ஹெட்கிளார்க் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். இராமநாதன் மனம் சிந்தனைகளால் குழம்பியது.

“நோயாகக் கிடக்கும்போதுதான் ஒரு மனிதனுக்கு அனுதாபமும் ஆறுதலும் தேவை. அப்போது அவற்றை அளிக்காமல் உடல் தேறி எழுந்து வந்தபின் அனுதாபப்படுவது போல் நடிப்பதும், ‘உங்களைப் பார்க்க வரவேண்டுமென்று நினைத்தேன்; முடியவில்லை’ என்று சொல்வதும் யாருக்கு வேண்டும்? சே! சே! ஒவ்வொரு மனிதனும் நெஞ்சில் ஒன்றை நினைக்கிறான். வாயில் ஒன்றைப் பேசுகிறான். நெஞ்சார அனுதாபம் இல்லாதவன்கூட அனுதாபப்படுவது போல நடிப்பதைத்தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.”

பஸ் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டே இருந்தது. உடலின் தளர்ச்சி காரணமாகக் கூட்டத்துடன் சேர்ந்து முண்டியடித்துக் கொண்டு ஏறத் தயங்கினான் இராமநாதன். கூட்டம் குறைந்ததும் ஒரு பஸ்ஸிலாவது வசதியாக இடம் கிடைக்குமென்பது அவன் நம்பிக்கை.

வீட்டைப் பற்றிய நினைவு வந்தது, அவனுக்கு ‘இன்றைக்கு ‘டிஸ்சார்ஜ்’ ஆவது தன் மனைவிக்குத் தெரியுமோ, தெரியாதோ? தெரிந்தால்தான் என்ன? அவளால் வந்து கூட்டிக் கொண்டு போக முடியாதே! வயிறும் பிள்ளையுமாக நிறை மாதத்தில் இருப்பவள் எப்படி வரமுடியும்?’ என்று நினைத்து மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான். ரொட்டி, பால், தக்காளி என்று ஆஸ்பத்திரி உணவுகளைச் சாப்பிட்ட உடல் தளர்ந்திருந்ததில் வியப்பில்லை. வயிற்றில் பசி, மனத்தில் வெளி உலகத்தின் போலி அனுதாபத்தைப் பற்றிய வெறுப்பு, உடலில் தளர்ச்சி… இவற்றோடு பஸ் நிறுத்தத்தில் கழிந்து கொண்டிருந்தது அந்த மாஜி நோயாளியின் நேரம்.

“ஹல்லோ மிஸ்டர் இராமநாதன்! செளக்கியமா? பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கிறீர்களோ?…” -