பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


இராமநாதன் மறுபடியும் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பழைய நண்பர் ஒருவர் நின்றார்.

“செளக்கியந்தான்! வாருங்கள். எங்கே இப்படி? இந்தப் பக்கமாக” இராமநாதன் அவரை வரவேற்றான்.

“சும்மாத்தான் இப்படி வந்தேன். அது சரி… உங்களுக்கு ஏதோ “அல்ஸர்” வந்து ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்தீர்களாமே?”

“ஆமாம்! என்ன செய்வது? போதாத வேளை”

“அடாடா பாருங்கள்… உங்களுக்கு உடம்பு சுகமில்லை என்ற விஷயமே எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் சார். வந்து பார்க்க வேண்டும் என்றிருந்தேன், முடியவில்லை… இப்போது தேவலைதானே?”

“ஊம்! தேவலைதான்.” இராமநாதனுக்கு ஒரே எரிச்சலாக வந்தது. இந்த மாதிரி விசாரணையை இன்னும் நான்கு பேர் செய்தால் போன நோய் திரும்பி வந்துவிடும் போல் தோன்றியது. செத்துப் போனவனிடம் போய், ‘நீங்கள் செத்துப் போய்விட்டீர்களாமே!…’ என்று கேட்பதுபோல் பொருத்தமில்லாமல் இருந்தது இந்த விசாரணை.

“நான் வரட்டுமா? உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் சார்!…”அவர் கிளம்பினார்.

இராமநாதன் பொம்மையைப் போல் தலையை அசைத்தான்.அவன் மனத்தில் ஒரு குமுறல்!

‘முப்பது நாட்களாக ஏங்கினேன், எதற்கு? யாராவது நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், பார்க்க வருவார்கள்; அனுதாபமாக நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போவார்கள்’ என்று நாள் நாளாக நிமிஷத்திற்கு நிமிஷம், மணிக்கு மணி ஏங்கினேன். ஒரு பயல் எட்டிப் பார்க்கவில்லை. ‘சார் இருக்கிறீர்களா? செத்துவிட்டீர்களா?’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. பார்க்கப் போனால் மனிதனுக்கு மனிதன் என்ன இருக்கிறது? பரஸ்பர அனுதாபத்தை உண்மையாகச் செலுத்தும் உரிமைகூட இல்லாவிட்டால் நெஞ்சில் சுயநலம்; உதட்டில் எல்லோருக்காகவும் அனுதாபப்படுவதுபோல் விசாரணைகள்.

“சீ! மானங்கெட்ட பயல்கள். இவர்கள் விசாரிக்கவில்லையென்று எவன் அழுதான்? வரவேண்டுமென்று நினைத்தார்களாம். வரமுடியவில்லையாம்… பொய்! அவ்வளவும் பொய்! நினைத்திருந்தால் செய்வதற்கா அதிக நேரமாகி விடும்? பசித்தவனுக்குத்தானே சோறு வேண்டும்? நோயாயிருக்கும்போது தரவேண்டிய அனுதாபத்தை இப்போது காட்டி உயிரை வாங்குகிறார்களே!…” இராமநாதன் கீழே காறித் துப்பினான்.அவன் மனப்புகைச்சல் இன்னும் அடங்கவில்லை. நோயாய் கிடந்து எழுந்தவனுக்கு இப்படி ஒரு மன உளைச்சல் பிறரை வெறுக்கும் அளவு இருப்பது இயற்கை. இராமநாதனும் அத்தகைய மனநிலையில்தான் இப்போது இருந்தான்.