பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / நாமொன்று நினைக்க...! 185


கால் கடுக்க நின்று கொண்டிருந்ததுதான் மிச்சம். ‘பஸ்’ இன்னும் கிடைக்கவில்லை. அவனுடைய கவலை ‘பஸ்’ கிடைக்கவில்லையே என்பதற்காக அல்ல. இந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் இன்னும் யாராவது தெரிந்தவர்கள் வந்து அனுதாப விசாரணையைத் தொடங்கிவிடுவார்களோ என்று அஞ்சினான். பேசாமல் வீட்டுக்கு ஓடிச் சென்று கதவை அடைத்துக் கொண்டு யாரையும் பார்க்காமல் ஆத்திரம் தீர அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு ‘அல்ஸருக்கு’ சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு மாத வீவுக்கு விண்ணப்பம் அனுப்பியபோது வீவு சாங்ஷன் செய்ய மறுத்த அதே ஆபீஸ் ஹெட் கிளார்க் இப்போது அனுதாபம் விசாரிக்கிறான். இந்த அனுதாபத்துக்கு என்ன விவஸ்தை இருக்கிறது? செயலில் காட்ட முடியாமல் வாயளவில் காட்டும் அனுதாபம் யாருக்கு வேண்டும்?

‘ஆஸ்பத்தியில் ஒரு மாதமாகப் படுக்கையில் கிடக்கிறேன். கையில் செலவுக்கு வறட்சி. ஒரு ஐம்பது ரூபாய் கைம்மாறாகக் கொடுத்து அப்புறம் வாங்கிக் கொள்’ என்று எழுதிக் கொடுத்துவிட்ட கடிதத்துக்குப் பதில் சொல்லாமலே திருப்பி அனுப்பிய நண்பர், “உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படி…” இப்போது எனக்கு அறிவுரை கூறுகிறார்.

‘ஐயோ! பாழாய்ப் போன பஸ் கிடைக்கமாட்டேனென்கிறதே. இவர்கள் முகத்திலெல்லாம் முழிக்காமல் வீட்டுக்கு எப்போது போய்ச்சேருவோம்?’ என்று எண்ணி மனம் புழுங்கியவாறு நின்று கொண்டிருந்தான் இராமநாதன். கடந்து போன அந்த ஒரு மாதமாக அவன் கடுமையான நோயுடன் ஆஸ்பத்திரியின் வார்டே கதி என்று கிடந்திருக்கிறான். ஆனால் அதற்காக உலகத்தின் எந்த மூலையிலும் எவரும் உண்மையாக அனுதாபப்பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. உலகம் முழுவதுமே இப்படித்தான் போலிருக்கிறது! அடுத்தவன் செத்துக் கொண்டிருந்தாலும் திரும்பிப் பாராமல் தன் வழியில் நடக்கத் தயங்காத மிருகக் குணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் மறைந்திருக்கிறது. நாகரிகப் போர்வையால் வெளியே அனுதாபப்படுவதுபோல் அதை மறைத்துக் கொண்டு வாழ ஒவ்வொருவனும் நடிக்கிறான். உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்கிறான். நெஞ்சில் நஞ்சு குமுற நினைத்துக் கொண்டே வாயில் தேன் சுரக்கப் பேசுகிறான்.

“ஐயா செளக்கியங்களா? பஸ்ஸுக்கு நிற்கிறீங்க போலிருக்கு?” இராமநாதனின் ஆபீஸ் பியூன் முனியப்பன் கையில் ஒரு பிளாஸ்குடன் வந்தான். இன்னொரு கையில் பழக்கூடை இருந்தது.

"எல்லாம் செளக்கியந்தான் எங்கே இப்படி வந்தே?”

“மானேஜர் வீட்டு அம்மா உடம்புக்குச் சுகமில்லாமே இந்த ஆஸ்பத்திரியிலே இருக்காங்க இந்தப் பிளாஸ்கையும் பழங்களையும் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வரச்சொல்லி ஐயா உத்தரவு…”