பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“அப்படியா? சரி. போய்க் கொடுத்துவிட்டு வா… பார்வை நேரம் முடிந்துவிடப் போகிறது.”

“ஒரு மாதமாச் சுகமில்லாமல் இருந்தீங்களாம். வந்து ஒரு வாட்டி பார்க்கக்கூட முடியவில்லை. என்னங்க செய்யிறது? அடிமைப் பய வேலை.”

‘சரிதான் போய்ச் சேர்! நீ வந்து பார்க்கவில்லை என்று ஏங்கி நான் செத்துப் போய்விடவில்லை.’ என்று சொல்லத் துடித்தது இராமநாதன் நாக்கு. ஆனால் சொல்லவில்லை. முகத்தைச் சுளித்தான். உதட்டைக் கடித்துக் கொண்டான்.

“அப்போ நான் வருகிறேனுங்க…”

“ஆகா! பேஷாகப் போய்விட்டு வா! மானேஜர் வீட்டு அம்மாள் காத்துக்கொண்டிருப்பாள்…”

அவன் போய்விட்டான். ‘பாவம்! இவனைச் சொல்லி என்ன குற்றம்? இவனை அதிகாரம் செய்கிறவர்கள் யாரோ அவர்கள்மேல்தான் இவன் அனுதாபத்தைக் காட்ட முடியும்.’ இராமநாதன் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஏனோ தெரியவில்லை! இந்த உலகத்தின் சபிஸ்தமான சகல உயிர்களும் எதை நோக்கியோ, எதற்காகவோ, மனத்தை மறைத்து வேஷம் போடுவதாக எனக்குத் தோன்றியது. உணர்வுக்கு மட்டுமே புலனாகக்கூடிய ஓர் சலனம் அவனிடத்தில் ஏற்பட்டுவிட்டது.

‘இந்த மாலையை ஒரு பெரிய தலைவருக்குப் போடுவதற்காகக் கொண்டு வந்தோம்.அவர் இன்றைய ரயிலில் வரவில்லை.அதனால் உங்களுக்குப் போடுகிறோம்’ ― என்று சொல்லிக் கொண்டே மற்றோர் சிறிய தலைவருக்கு அந்த மாலையைப் போட்டால் அவர் மனத்தில் எவ்வளவு அருவருப்பு உண்டாகுமோ, அவ்வளவு அருவருப்பு இராமநாதன் மனத்தில் உண்டாயிற்று. அவன் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே நோய்ப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்தபோது ஒருவராவது அவனைப் பார்க்க வரவில்லை. இப்போது வந்து அனுதாபம் விசாரிக்கிறவர்களும் ஏதோ தற்செயலாக அவனை வழியில் சந்தித்துவிட்ட குற்றத்திற்காக ‘கேட்டு’ வைப்போமே ― என்று கேட்டுவிட்டுப் போகிறார்கள். அவன் ஆண்மகன்! தன்மானமுள்ளவன். உள்ளத்திலிருந்து பிறக்கின்ற உண்மையான இரக்கம்தான் அவனுக்கு வேண்டும்.

‘போனால் போகிறது’ என்பதுபோல் கேட்கும் வாய் அனுதாபம் அவனுக்குத் தேவையில்லை. அந்த அனுதாபத்தைப் பொறுத்துக் கொள்வதைவிட முதுகில் நாலு விழுந்தால்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.

“என்னா சாமீ? பஸ் இப்போதைக்குக் கிடைக்காது. நம்மவண்டியிலே போகலாம். எட்டனா கொடு போதும்” ஒரு ரிக்‌ஷாக்காரன்.

“வேண்டாமப்பா!”