பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / நாமொன்று நினைக்க...! 187


மேலும் பத்து நிமிஷம் கழிந்தது. “இந்தாருங்கள்! இதென்ன நோயாய்க் கிடந்த உடம்போடு வெயிலில் நின்று கொண்டு?…” இராமநாதன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். மேலும் திடுக்கிட்டான்.

அவன் மனைவி ராஜம் காபிக் கூஜாவுடன் மெல்ல அசைந்து நடந்து அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

“இதென்ன அசட்டுக் காரியம் செய்தாய் ராஜம்? நிறை மாதத்தில் வயிறும் பிள்ளையுமாக இப்படி வரலாமா? எனக்கு வர வழியா தெரியாது” அவன் அவளைக் கடிந்து கொண்டான்.

“எல்லாம் வரலாம்! வந்தால் ஒன்றும் குடி முழுகி விடாது. இந்தாருங்கள் இந்தக் காபியைக் குடியுங்கள் முதலில்…”அவன் வாங்கிக் குடித்தான்.

“பஸ்ஸில்தானே வந்தாய்?”

“இல்லை. பஸ்ஸே கிடைக்கவில்லை, நடந்துதான் வந்தேன்.”

“அடி பாவி!” - அவன் இரைந்து கத்திவிட்டான்.

“உஷ்! இங்கே இரைச்சல் போடாதீர்கள். நான் வராவிட்டால் நீங்கள் பசியோடு பஸ்ஸிற்கு எவ்வளவு நாழி காக்க வேண்டியிருக்கும்?”

அவன், வயிற்றின் தாய்மை முகத்தில் பொலியும் தன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். “இந்த அன்பும் அனுதாபமும் பொய்யில்லை. உரிமை இருந்தால் உண்மையான அனுதாபம் பிறக்க முடியும்” - என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

(சமூக ஊழியன், 15.11.1957)