பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உறியடி ★ 189



கலயங்களையும் அடித்துக் கீழே நொறுக்கித் தள்ளுகிறானோ, அவனைக் கூட்டம் முழுவதும் கொண்டாடிப் போற்றும். இதுதான் உறியடித் திருவிழா என்பது.

கரையாளன் கம்பை ஓங்கி வேகமாக ஓடிவரும்போது திடீரென்று உறி எட்டாத உயரம் போவதும், அவன் அடிக்க முடியாமல் சுண்ணாம்பு நீர் கண்ணைக் கரிக்கத் திணறிக்கொண்டிருக்கும்போது, உறி எட்டுகின்ற உயரத்திற்கு வருவதும், வேடிக்கையாக இருக்கும்.

‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்று பழமொழி சொல்வார்களே - அந்த மாதிரி எட்டும்போது அடிக்க முடிவதில்லை. அடிக்க முடிகிறபோது எட்டுவதில்லை. இதில் ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவமே பொதிந்து கிடப்பதுபோல் எனக்குத் தோன்றியது. வருஷா வருஷம் உறியடித் திருவிழாவின்போது அந்தத் தத்துவம் என் சிந்தனையில் வியாபித்துவிடும்.

‘வாழ்வில் எட்டுவதுபோலத் தோன்றும் எதுவும் உண்மையில் எட்டுவது இல்லை. எட்டாதது போலத் தோன்றுவது எதுவும் உண்மையில் எட்டாதது இல்லை. இப்படி நடந்துவிடும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டிருப்பது அப்படி நடக்காமல் போய்விடுகிறது. இப்படி நடக்காது என்று கணக்கிட்டு முடிவு கட்டிவைத்திருப்பது அப்படியே நடந்துவிடுகிறது!’

இந்த உண்மையை உலகத்திற்கு விளக்குவதற்காகத்தான் ஆதிநாராயணப் பெருமாள் வருஷந் தவறாமல் உறியடித் திருநாள் கொண்டாடுகிறாரோ, என்னவோ? அன்றும் உறியடியாகையினால் மனத்தில் மேற்கண்ட சிந்தனைகள் நிழலாட வேறு பொழுதுபோகாமல் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.ஆறாவது ஆவர்த்தனமான வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வெற்றிலைபோடத் தொடங்கிய சமயத்தில் திருவடியாப்பிள்ளை வந்து சேர்ந்தார்.

“வாருங்கள், வாருங்கள்! உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... உறியடி அமர்க்களப்படுகிறதே!...”

"ஆமாம்! அமர்க்களத்துக்குக் கேட்பானேன்? அதுவும் இந்த வருஷம் பீஷ்மக் கரையாளன் உறியடி வெளுத்துக் கட்டிவிடுவான். பயல் குறி வைப்பதில் எம்டன்!”

“என்ன, பீஷ்மக்கரையாளனா? கேள்விப்படாத பெயராயிருக்கிறதே? அப்படிக் கூடவா அந்தச் சாதியில் பெயர் வைக்கிறார்கள்?”

“அது அவன் சொந்தப் பெயர் இல்லை. சேது ராமலிங்கக் கரையாளன் என்பது இயற் பெயர். இப்போது அவனுக்கு ஐம்பத்திரண்டு வயது. இன்னும் கலியாணமாகவில்லை. ஆள் ஒற்றைக் கட்டைதான். பிடிவாதமாக ஏகாங்கியாயிருக்கிறான். அதனால்தான் ‘பீஷ்மக் கரையாளன்’ என்று அவனுக்குப் பேர் ஏற்பட்டுவிட்டது.”

“என்ன காரணம்? அவன் இத்தனை வயது வரை கலியாணம் செய்து கொள்ளாதது ஏன்? உங்களுக்குத் தெரிந்திருக்குமே.”