பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / உறியடி 195


மூன்றாம் தடவை அவன் அடிக்க ஓடிவரும்போதுதான் அந்த விபரீதமான சம்பவம் நடந்துவிட்டது. ‘சற்றுமுன் அவனுக்கு ஏமாந்து போய்விட்டோமே’ என்ற ரோஷத்தினால் கயிறு, பீச்சாங்குழலை வைத்துக் கொண்டிருந்த ஆட்கள் உஷாராக இருந்தனர். அவன் துரத்திலிருந்து ஓங்கிய கம்புடன் துள்ளிப் பாய்ந்து ஓடிவந்தான்.

அப்போது அவனுக்காக அவன் தகப்பன் பார்த்து வைத்திருந்த அந்தப் பெண்ணின் கைப்பிடியிலிருந்த சிறுமி மெல்ல நடந்து உறிக்கு நேரே குறுக்கே ஓடி நின்றுவிட்டாள். சேது ராமலிங்கம் புலிப் பாய்ச்சலில் கனவேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான். குழந்தை அவன் வழியின் குறுக்கே நின்றது.

“ஐயோ! குழந்தை… நடுவிலே ஓடிப்போய் நிக்கிதே!”அந்தப் பெண் ― அவனுடைய எதிர்கால மனைவி ― அலறிக் கொண்டே குழந்தையை எடுப்பதற்காகக் குறுக்கே பாய்ந்தாள். கூட்டத்தில் பலவிதமான குரல்களும், பரபரப்பும், குழப்பமும் உண்டாயிற்று. அப்போது அந்தப் பாழாய்ப் போன பீச்சாங்குழற்காரன் சும்மா இருந்து தொலைக்கக்கூடாதா?… ஓடி வந்து கொண்டிருந்த சேதுராமலிங்கத்தின் கண்களில் சுண்ணாம்புநீரைப் பீச்சிவிட்டான். கண் பார்வை மறையவே எதிரே இருப்பது தெரியாமல் உறியைத்தான் அடிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பலங்கொண்ட மட்டும் கம்பை ஓங்கி ஒரு போடு போட்டான் அவன். அடுத்த விநாடி “ஐயோ!” என்று வீரிட்டு அலறிக் கொண்டு கீழே சாய்ந்தாள் அந்தப் பெண். உறியின் மேலே விழ வேண்டிய அடி குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஓடிவந்த பெண்ணின் மண்டையில் விழுந்துவிட்டது. குழந்தை எப்படியோ தப்பிவிட்டது. அதற்கு ஒரு விபத்தும் இல்லை. ஆனால் அந்தப் பெண்…?

அலறலைக் கேட்டுச் சுண்ணாம்பு நீரின் எரிச்சலையும் பொறுத்துக் கொண்டு திடுக்கிட்டுப் போய்க் கண்களைத் திறந்தான் அவன், அவன் மணக்க இருந்த ‘அவலட்சணம்’ மண்டை நட்ட நடுவில் இரண்டாகப் பிளந்து இரத்தம் ஒழுகக் கீழே விழுந்து கிடந்தாள். கூட்டத்திலிருந்தவர்களுக்கு விஷயம் புரிய கொஞ்ச நேரம் பிடித்தது.

ஒரே கலவரம். உறியடித் திருநாள் அலங்கோலமாக அரைகுறையாக முடிந்தது. சேதுராமலிங்கத்தின் கண்முன் உலகமே சுழல்வது போலிருந்தது. யாரோ ஓடிப்போய் வண்டி கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்ணைத் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வைத்தியர் வீட்டுக்குப் போனார்கள். வைத்தியர் பார்த்தார். தேங்காயை உடைக்கிற மாதிரி நட்டநடு மண்டையை இரண்டாக உடைத்துப் பிளந்திருந்தது. அந்தப் பெண் அதற்குமேல் எந்த சிகிச்சையாலும் பிழைக்கும் என்று அவரால் நம்ப முடியவில்லை. ஆனாலும் வந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மண்டையில் ஏதோ மருந்து வைத்துக் கட்டினார். விதி பெரியதாக இருந்தால் மருந்தும் மாயமும் என்ன செய்யும்? நோய்க்குத்தான் மருந்துண்டு. விதிக்குக்கூடவா மருந்து உண்டு? அந்தப் பெண் அன்றிரவே இறந்துவிட்டாள்.

அவளுடைய தகப்பனை யாரோ கிளப்பிவிட்டு விட்டார்கள்.