பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“உன் மகளைக் கட்டிக் கொள்ள அந்தப் பயல் சேது ராமலிங்கத்திற்கு இஷ்டமே இல்லை. ‘அவலட்சணம்’ ‘அவலட்சணம்’னு கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் அதுனாலே இது தற்செயலா நடந்தது இல்லை. அந்த அயோக்கிய ராஸ்கல் வேணும்னே மண்டையைப் பிளந்திருக்கிறான். தற்செயலா விழுந்த அடியானால் இப்படி உயிர் போகிறவரை ஆகுமா?”

காய்ந்த வைக்கோற் போரில் எங்காவது ஒரு மூலையில் நெருப்பை அள்ளிவைத்தால் பற்றாமலா போகும்? தன் மகளைக் கட்டிக் கொள்ளப் பிடிக்காததனால் அவன் வேண்டுமென்றே உறியடிக்கிற பாவனையில் மண்டையைப் பிளந்து கொன்றுவிட்டான் என்றே அவர் நம்பினார்.

“எங்கே அந்த நாய்ப் பயல்? பிடி சொல்றேன். கழுத்தைச் சீவிக் கையிலே கொடுத்திடலாம். பெண்ணைப் பிடிக்கலேன்னாக் கட்டிக்க இஷ்டமில்லைன்னிட்டுப் போகட்டுமே? அதுக்காகப் படுகொலை செஞ்சிருக்கானே?”―பெண்ணின் தகப்பனும் அவனைச் சேர்ந்தவர்களும் அரிவாளும் கம்புமாகக் கைக்கு வந்ததை எடுத்துக் கொண்டு சண்முகவடிவேலுக்கரையாளர் வீட்டின் மேல் படையெடுத்துவிட்டார்கள்.

பாவம்! பெரிய கரையாளருக்கு அதுவரை சமாசாரம் எட்டவில்லை. அவர் மறுநாள் நடக்க இருந்த கலியாணத்துக்காகப் பந்தற்கால்களில் வாழைமரம் கட்டிக் கொண்டிருந்தார். சம்பந்தியாகப் போகிற மனிதன் கத்தியும் கம்புமாக யுத்தத்துக்கு வருகிறமாதிரி வந்தபோது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

“வாங்க அண்ணாச்சி! வாழை மரம் நானே வெட்டியாந்து கட்டிட்டேனே? நீங்க வேறே அரிவாளை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டிங்களே? அப்படித் திண்ணையிலே குந்துங்க” என்று சம்பந்தியைச் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

“வே! பெரிய கரையாளரே! வாழைமரத்தை வெட்ட அரிவாள் கொண்டாரல்லே. உம் மவன் வம்சத்தையே வெட்டக் கொண்டு வந்திருக்கேன்! எங்கே உம்ம மகன்?”

“ஏன்? என்ன நடந்திச்சு? அவன் இன்னும் உறியடியிலேருந்து திரும்பியே வரலியே!”

“ஓகோ, அப்படியா சேதி? கொலை பண்ணிட்டு ஓடித் தப்பிச்சுடலாம்னு நினைச்சானா?”―மீசை துடிதுடிக்க நெருப்புப் பழமெனச் சிவந்த கண்களை உருட்டி விழித்துக் கொண்டே கத்தினார் பெண்ணைப் பறி கொடுத்தவர்.

அதற்குள் ஒருவன் நடந்ததைச் சுருக்கமாகக் கிழவருக்குக் கூறினான்.

“அண்ணே! சேது குளத்தங்கரை பக்கமா ஓடிக் கொணடிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னே நான் பார்த்தேன்!” என்றான் ஒருவன். உடனே அத்தனை பேரும் திமுதிமுவென்று குளத்தங்கரைப் பக்கம் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அங்கே குளக்கரை மாந்தோப்பில் ஓடுவதற்குத் தயாராயிருந்த பூங்காவனமும் சேதுவும் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டனர்.