பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / உறியடி 197


“ஏண்டாலே! இந்தப் பூங்காவனத்து மேலே இருக்கிற ஆசையாலே என் மகளை அடிச்சுக் கொன்னிட்டு இவளோடே ஓடலாமின்னு பாத்தியா?” ― அவர் இரைந்து கூப்பாடு போட்டார்.

“நான் வேணுமின்னு ஒண்னுஞ் செய்யலை. அவ குறுக்கே வந்திருக்கா. அது எனக்குத் தெரியாது. அந்த நேரம் பார்த்து மஞ்சள் தண்ணிக்காரன் கண்ணிலே பிச்சிப்பிட்டான். உறி மேலே அடிக்கிறதாக நினைச்சுக்கிட்டு அடிச்சிட்டேன். அது இப்படி ஆகும்னு எனக்குத் தெரியுமா? சத்தியமா சாமி சாட்சியா நான் வேணுமின்னு செய்யலிங்க…” அவன் கெஞ்சினான்.

“கொலைக்காரப் பயலே நாடகமா ஆடுறே!” ― அரிவாளை ஓங்கி வெட்டப் போனார் அவர்.

“வேண்டாங்க அண்ணாச்சி! இவனைக் கொன்னிட்டு நீங்க செயிலுக்குப் போகணுமா? இப்படியே இவனைப் போலீசுலே பிடிச்சுக் கொடுத்திடுவோம்?” என்று சொல்லி அவர் கையைப் பிடித்துத் தடுத்தார் விவரம் தெரிந்த ஒருவர். இதற்குள் நாராயணக் கரையாளர் வீட்டில் தம் மகளைக் காணாமல் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

பெண்ணைப் பறி கொடுத்தவரும், பெண்ணைப் பறி கொடுக்க இருந்தவருமாகச் சேர்ந்து சேதுராமலிங்கத்தைப் போலீஸில் பிடித்து ஒப்படைத்தார்கள். தம் மகளை ஏமாற்றி அக்கரைச் சீமைக்குக் கடத்திக் கொண்டு போக முயன்றதாக நாராயணக் கரையாளரும், உறியடித்திருநாளின்போது தம் பெண்ணை வேண்டுமென்றே மண்டையைப் பிளந்து கொன்றதாக மற்றவரும், சேதுராமலிங்கத்தின் மேல் ‘கிரிமினல்’ வழக்குத் தொடர்ந்தார்கள்.

வழக்கு முடிவில் சேதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்குக் கொண்டு போகப்பட்டான் அவன். மகனால் ஏற்பட்ட அவமானம் தாங்காது சில நாட்களில் சண்முகவடிவேலுக் கரையாளர் உயிர் துறந்தார். நாராயணக் கரையாளர் பூங்காவனத்தை யார் யாருக்கோ கட்டிக் கொடுத்துவிட முயன்றார். சேதுவுக்கும் அவளுக்கும் முன்பிருந்த தொடர்பைப் பற்றி ஊரில் செய்தி தெரிந்திருந்ததனால் கெளரவமானவர்கள் யாரும் அவளைக் கட்டிக் கொள்ள முன்வரவில்லை. கடைசியில் பணத்தின் மேலும் சொத்துச் சுகங்களின் மேலும் ஆசை காட்டி ஒரு ஏழைப் பையனை அவளுக்குக் கணவனாக்க ஏற்பாடு செய்தார்.மணந்தால் சேதுராமலிங்கத்தைத் தவிர இந்த ஜன்மத்தில் வேறெவரையும் மணப்பதில்லை என்ற திடமனத்தோடு இருந்த பூங்காவனம் கலியாணத்திற்கு முதல் நாளிரவு மயில்துத்தத்தைச் சாப்பிட்டு இறந்தாள்.

காலப் பெருந்தருவிலிருந்து வருஷ இலைகள் பழுப்பேறி பழுப்பேறி உதிர்ந்து கொண்டிருந்தன. பல வருஷ காலத்துக்குப் பின் இந்தியக் குடியரசு தினத்தன்று பாரத சுதந்திர சர்க்கார் கைதிகளுக்கெல்லாம் பரிபூரண விடுதலை அளித்தனர். அப்போது சேதுராமலிங்கமும் விடுதலையாகி வந்தான்.